தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வீக கதைகள் - 22

தெய்வீக கதைகள் - 22

தெய்வீக கதைகள் - 22


ADDED : ஆக 21, 2025 01:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 01:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அபிமன்யு

தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடந்த பாரதப்போரின் 13ம் நாளில் எல்லோரும் பரபரப்பாக இருந்தனர். கவுரவர்களின் சேனாதிபதியான துரோணர் அமைத்த சக்கர வியூகத்தை உடைத்தெறிவதற்காக திறமையுடன் போர் புரிந்து கொண்டிருந்தான் அர்ஜுனனின் மகன் அபிமன்யு. வியூகத்தை உடைக்கும் வலிமை பெற்றிருந்த அர்ஜுனன், அந்த நேரத்தில் குருக்ஷேத்திரத்தில் இல்லை. சரி! சக்கர வியூகத்தை உடைக்கும் தைரியம் அபிமன்யுவுக்கு எப்படி வந்தது என்பதை அவன் வாய்மொழியாக பார்ப்போமா...

என் தாய் சுபத்திரையின் கருவில் இருந்த போது, ஒருநாள் என் மாமா கிருஷ்ணர் வந்தார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்ட பிறகு தங்களின் சிறுவயது நிகழ்வுகளை பேசிக் கொண்டனர். அப்போது போர்த் தந்திரம் பற்றிய பேச்சு வந்தது. சக்கர வியூகம் குறித்து பேசினார் மாமா. தாயின் கருவறைக்குள் இருந்தபடி நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் சக்கர வியூகத்தில் இருந்து வெளியேறும் வழிமுறையைப் பற்றி கூறத் தொடங்கிய போது என் தாய் அசதியில் துாங்கத் தொடங்கினார். அதன் பின் அவர் கேட்கவில்லை. எனவே சக்கர வியூகத்தில் இருந்து வெளியேறும் உத்தி எனக்குத் தெரியாமல் போனது. இதுவே பாரதப் போரில் என் விதியைத் தீர்மானித்தது.

பதினெட்டு நாள் நடைபெற்றது பாரதப் போர். பன்னிரண்டாம் நாள் நான் கவுரவ சேனைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தினேன். என் தெய்வீக ஆயுதங்களால் துரியோதனனைச் சுற்றி ஒரு மாயத் தடுப்பை ஏற்படுத்தினேன். அதே நேரம் பெரியப்பா பீமன் கவுரவ சகோதரர்களில் பலரைக் கொன்றார். மாயத் தடுப்பு காரணமாக துரியோதனனால் இதைத் தடுக்க முடியாமல் போனது.

எனவே என் மீது கோபம் கொண்டார் துரியோதனன். தன் நண்பர் கர்ணனை அழைத்து என்னைக் கொல்லுமாறு உத்தரவிட்டார். நானும், கர்ணனும் கடுமையாகப் போரிட்டோம். ஒரு கட்டத்தில் என் தேரை ஒடித்து அதைச் செயலற்றதாக ஆக்கினார் கர்ணன். ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆனதால் அதற்கு மேல் போரிட முடியாமல் அவரவர் இடத்திற்குத் திரும்பினோம்.

மகாபாரதப் போர் நடைபெற்ற நாட்களில்தான் தான் கருவுற்றதை தெரிந்து கொண்டாள் உத்தரை. நானும் தந்தையாகப் போகிறேன் என்ற மகிழ்ச்சியுடன் போருக்கு புறப்பட்டேன். உத்தரைக்குக் கலக்கமாக இருந்தது. அவள் மனதைத் தேற்றி விட்டு போரில் பங்கேற்றேன்.

போர் தொடங்கிய பதின்மூன்றாம் நாள் அது. என்னை எப்படியும் கொன்றே ஆக வேண்டும் என முடிவெடுத்தார் துரியோதனன். என் தந்தை அர்ஜுனன் குருக்ஷேத்திரத்தில் இருக்கும் வரை என்னை எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்ட அவர் தன் குழுவினருடன் வஞ்சக திட்டத்தில் இறங்கினார்.

என் தாத்தா விராட மன்னரின் நாட்டை நோக்கி ஒரு படையை அனுப்பினார் துரியோதனன். விராட மன்னன் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இருந்தார். எனவே உடனடியாக வலிமை மிக்க ஒருவரை விராட நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் பாண்டவர்களுக்கு ஏற்பட்டது. தவிர வேகமாகவும் அங்கு சென்று விட்டு மீண்டும் குருக்ஷேத்திரம் வந்தாக வேண்டும். எனவே அர்ஜுனனோடு அவனது ரதத்தின் சாரதியாக கிருஷ்ணர் சிறிய படையோடு அங்கு சென்றார்.

அன்று அர்ஜுனர் போர்க்களத்தில் இருக்க மாட்டார் என்பதை அறிந்து கொண்ட கவுரவர்கள் சக்கர வியூகம் அமைத்து அதன் மூலம் என்னைக் கொல்ல முடிவெடுத்தனர். யூகத்தை உடைத்து உள்ளே செல்லும் நுட்பம் துருபதன், அர்ஜுனர் மற்றும் நான் ஆகிய மூவருக்கே தெரியும். அர்ஜுனர் களத்தில் இல்லை. எனவே துருபதனை அனுப்பி சக்கர வியூகத்தை உடைக்கச் சொன்னார் பெரியப்பா தர்மர். ஆனால் துரோணர் துருபதருடன் கடுமையாகத் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருக்க, சக்கர வியூகத்தின் உள்ளே துருபத மன்னரால் நுழைய முடியவில்லை.

இதை கண்டு சக்கர வியூகத்தை உடைக்க நான் கிளம்புகிறேன் என்றேன். ஆனால் சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல முடியுமே தவிர அதில் இருந்து மீண்டு வரும் வழி எனக்கு தெரியாது என்பதை அப்போது நான் பெரிதாக எண்ணவில்லை. எதிரிகளை மாய்க்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருந்தது.

சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் போது எனக்கு பாதுகாப்பாக என் தந்தையைத் தவிர போர்க்களத்தில் இருந்த நான்கு பாண்டவர்களும் வருவதாக திட்டமிட்டனர். ஆனால் அவர்களை ஜெயத்ரதன் தடுத்து முன்னேற முடியாமல் செய்து விட்டார். தான் செய்த தவத்தின் பலனாக பாரதப் போரின் போது ஒரே ஒரு நாள் அர்ஜுனனைத் தவிர மீதி அனைவரையும் அவரால் கட்டுப்படுத்த முடியும் என்ற வரத்தை அவர் பெற்றிருந்ததால் இது சாத்தியமானது.

இதன் காரணமாக நான் மட்டும் சக்கர வியூகத்தின் உள்ளே நுழைய நேர்ந்தது. கவுரவர்களுடன் நேரடியாக போரில் ஈடுபட்டேன். ஆனால் யுத்த தர்மத்திற்கு மாறாக என் மீது ஒரே சமயத்தில் சகுனி, கர்ணன், துரியோதனன், துச்சாதனன், துரோணர், ஜெயத்ரதன் அனைவரும் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக உயிர் விட நேரிட்டது.

விராட நாட்டை காப்பாற்றிய என் தந்தை குருக்ஷேத்திரத்துக்கு வந்த போது என் முடிவை அறிந்து துக்கப்பட்டு அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் மன்னன் ஜயத்ரதனைக் கொன்று தீருவேன் என சபதமிட்டு அந்த சபதத்தை கிருஷ்ணரின் உதவியுடன் நிறைவேற்றினார்.

-பக்தி தொடரும்

உமா பாலசுப்ரமணியன்

umakbs@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us