ADDED : ஆக 21, 2025 01:50 PM

கணபதி என்ற மாணவன் குருகுலத்தில் மற்றவர்களுடன் பேசிக் கொண்டே இருப்பான். குருநாதர் அவனைக் கண்டித்தும் திருந்தவில்லை. ஒருநாள் கோபத்தில் குருநாதர், ஒரு யானையின் முன்னர் கணபதியை கட்டி வைத்தார். சங்கிலியை அறுத்துக் கொண்டு யானை வந்தால் தன்னை மிதிக்குமே என பயந்தான்.
'' யானையின் வாயைப் பார்'' என்றார் குருநாதர்.
''குருநாதா! அதன் வாயை நம்மால் பார்க்க முடியாதே! அதைத் தான் தும்பிக்கை மூடியிருக்குதே'' என்றான்.
'சரி...எப்போதெல்லாம் அதன் வாயை பார்க்க முடியும்?” என குருநாதர் கேட்டார்.
“ உணவை அதன் வாய்க்குள் உணவை வைக்கும் போதும், பிளிறும் போதும் மட்டுமே பார்க்கலாம்” என்றான்.
“சரியாகச் சொன்னாய். இதில் உள்ள தத்துவம் உனக்கு புரிகிறதா?” எனக் கேட்டார். கணபதி விழித்தான்.
'' உணவு சாப்பிடவும், தேவைக்கு பேசுவதற்கும் மட்டுமே வாய் திறக்க வேண்டும். மற்ற சமயங்களில் மவுனமே மனிதனுக்கு நன்மை தரும். இதனால் தான் விநாயகர் யானைத்தலையுடன் இருக்கிறார். அவரது திருநாமத்தை பெயராக கொண்ட நீயோ தேவையற்றதை பேசுகிறாய். இனி வாய் திறப்பாயா?'' என்றார் கனிவுடன்.
தலையசைத்த கணபதி, அதன்பின் பொறுப்புள்ளவனாக செயல்பட்டான்.
