ADDED : ஆக 21, 2025 01:51 PM

குபேர செல்வத்தை அருளும் டுண்டி கணபதி
காசியில் விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள கணபதியின் பெயர் இது. டுண்டி என்றால் தொந்தி என்று பொருள். தேவர்கள், இவரை வழிபட்ட பின்பே, காசி விஸ்வநாதரை தரிசித்து உய்ந்தனர் என்கிறது காசி புராணம். அத்தலத்தில் கன்னிமூலையில் க்ஷேத்திர கணபதியாக இவர் திகழ்கிறார்.
தியான சுலோகம்
அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்னபாத்ரம் ஸ்வதந்தகம் |
தத்தேகரைர் விக்னராஜோ டுண்டிநாமா முதே Sஸ்துந: ||
அக்ஷமாலாம் - ஜபமாலையையும்
குடாரம் - மழு எனும் ஆயுதத்தையும்
ச - இரண்டையும் மேலிரு கைகளிலும்
ரத்னபாத்ரம் - (இவற்றோடு) ரத்தினங்கள் நிறைந்த பாத்திரத்தையும்
ஸ்வதந்தகம் - தனது ஒடித்த தந்தத்தையும்
கரைர் - (கீழ் இரு) கரங்களால்
தத்தே - தாங்கியவராக உள்ளவரும்
டுண்டிநாமா - டுண்டி என்ற பெயருடையவருமான
விக்னராஜா - தடைகளை நீக்கும் கணபதியானவர்
ந: - எங்களுக்கு
முதே - மகிழ்வு அளிப்பவராக
அஸ்து - விளங்கட்டும்.
ஜபமாலை: இறைவனின் மறைப்பாற்றலைக் குறிப்பது.
ரத்தின பாத்திரம்: அனைத்து செல்வங்களையும் தருபவர் என்பதை உணர்த்துகிறது.
மழு: தந்தை சிவபெருமானின் ஆயுதம். உயிர்களைப் பிணைத்துள்ள பாசங்களை வெட்டி நீக்கி, வீடுபேற்றைத் தருவது.
ஓடித்த தந்தம்: தூய்மையையும் மன உறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்று வதைக் காட்டுவது.
பலன்: குபேரசெல்வம் கிடைக்கும்; சிவஞானம் கிட்டும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்