
ஒருமுறை காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க வந்தார் பக்தரான டி.எஸ்.ராமசாமி ஐயர். பத்மபூஷண் விருது பெற்ற இவர் முதுமையால் சிரமப்பட்டார். அவர் வணங்கிய போது உட்காரும்படி கண்களால் ஜாடை காட்டினார் மஹாபெரியவர். அவரும் சிரமப்பட்டு உட்கார்ந்தார். அவரைப் பார்த்து புன்னகையுடன், 'கால்களை நீட்டிக் கொண்டு சவுகரியமாக உட்கார்' என்றார் மஹாபெரியவர். அதைக் கேட்டு ராமசாமி பயத்துடன் காலை நீட்டினார்.
இருக்காதா பின்னே... கோயில், மகான்களின் சன்னதிகளில் கால் நீட்டி உட்கார்வது பாவம் என ராமசாமி யோசித்தார். அப்போது மஹாபெரியவர் பக்தர்களை பார்த்தபடி, 'அவருக்கு சவுகரியமா இருக்கட்டுமேன்னு அப்படிச் சொன்னேன். பாவம், சின்ன வயசுல சைக்கிள் ஓட்டும் போது விழுந்து கால் எலும்பு முறிந்தது. அதனால காலை மடக்க அவரால முடியாது'' என்றார்.
எப்போதோ நடந்ததை இப்போது சொல்கிறாரே சுவாமிகள் என ஆச்சரியப்பட்டனர் பக்தர்கள். ராமசாமிக்கு கண்ணீர் பெருகியது. அவரிடம் பல விஷயங்களை சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார் மஹாபெரியவர். அருகில் இருந்த தொண்டரிடம், ராமசாமிக்கு காபி ரொம்ப பிடிக்கும்.
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பக்தர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் வீட்டில் இருந்து 'நான் சொன்னதாகச் சொல்லி காபி வாங்கிக் கொடு. காபின்னா இவருக்கு உயிர்' என்றார். சிரித்தபடியே பிரசாதமும் கொடுத்தார். 'காபிக்கு பதிலாக பால், கஞ்சியை சாப்பிடுங்கள்' என உபதேசிப்பது மஹாபெரியவரின் வழக்கம். ஆனால் இப்படி சிலருக்காக காபியைக் கொடுக்கவும் சொல்லியிருக்கிறார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்.
* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திரு.
* சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும்.
* முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

