
காஞ்சிபுரம் மடத்தில் தங்கியிருந்து மஹாபெரியவருக்கு தொண்டு செய்தவர் வேதபுரி. அவருடைய சொந்த ஊரில் அவரது மனைவி மீனாட்சியும், குழந்தைகளும் வசித்தனர். குடும்பத் தேவைக்கான அரிசியை மாதந்தோறும் ரேஷன் கடையில் வாங்குவதோடு, சொந்தமாக இருந்த சிறிய நிலத்தில் கிடைக்கும் நெல்லையும் அரிசியாக்கி பயன்படுத்தி வந்தார். அப்போது அரிசி தட்டுப்பாடு நிலவியதால், வீட்டில் அரிசி வைப்பதில் அரசின் கட்டுப்பாடு இருந்தது. கூடுதலாக அரிசி இருந்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.
இந்நிலையில் வேதபுரியின் மீது பொறாமை மிக்க ஊரார் சிலர், வேதபுரியின் வீட்டில் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக தாசில்தாரிடம் புகார் செய்தனர். ஆனால் காஞ்சிபுரம் மடத்தில் தங்கியிருந்த வேதபுரிக்கு ஏதும் தெரியாது. இது பற்றி அறிய தாசில்தார் அந்த ஊரில் இருந்த கிராம உதவியாளரிடம் விசாரித்தார்.
'காஞ்சி மஹாபெரியவரின் மடத்தில் முழு நேரமாக பணிபுரியும் வேதபுரி நல்ல மனிதர். நேர்மை தவறாதவர். அவருக்கு சொந்தமாக சிறிதளவே நிலம் உள்ளது' என்றார். அதற்கு தாசில்தார், 'அப்படியா... என்னை வேண்டுமென்றே சிலர் குழப்பி விட்டனர். இந்த புகாரை பொருட்படுத்த தேவையில்லை' என பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மஹாபெரியவர் மீது பக்தி இருந்தால் நேர்மையும், நல்ல குணமும் அமையும். நேர்மையானவர்களுக்கு தோல்வியே கிடையாது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதே.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! -நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

