ADDED : ஜூலை 15, 2025 11:59 AM

காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க தன் மகனுடன் வந்தாள் ஒரு பெண். சுவாமிகளை வணங்கி விட்டு, 'பெரியவா... இவனுக்கு வாய்ப்புண் ரொம்ப நாளா இருக்கு. எத்தனையோ வைத்தியம் செய்தும் சரியாகவில்லை. ரொம்ப கஷ்டப்படறான்' என வருந்தினாள்.
மடத்தில் இருந்த சீடர்களிடம், 'இப்போ தேங்காய்ப்பூ கிடைக்குமா' எனக் கேட்டார். அவர்கள் விழித்தனர். காரணம் இது பற்றி கேள்விப்பட்டதே இல்லை.
'ஓ... தென்னை மரம் பூக்கும் போலிருக்கு' என எண்ணிக் கொண்டனர்.
அப்போது சரண கோஷம் சொல்லியபடி மடத்திற்குள் நுழைந்தார் ஒரு வேதபண்டிதர். அவர் பெயர் கணபதி சாஸ்திரி. சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள காக்கிநாடா. பக்தர்கள் சிலரும் அவருடன் வந்திருந்தனர். மஹாபெரியவரை வணங்கி விட்டு ஓரமாகச் சென்று தாங்கள் கொண்டு வந்திருந்த மட்டைத் தேங்காய்களை எடுத்தனர். மடத்தில் இருந்த குத்துக்கல்லில் மட்டைகளை உரித்து தேங்காய்களை உடைத்தனர். மூடிகளை எடுத்து வந்து சுவாமிகளின் முன்புள்ள மூங்கில் தட்டுகளில் பரப்பினர். அதில் நான்கு மூடிகளில் எலுமிச்சை அளவுக்கு உருண்டையாக தேங்காய்ப்பூ வளர்ந்திருந்தது.
மஹாபெரியவர் அதை பார்த்ததும் சீடர்களை அழைத்தார். ''இதோ... இதுதான் தேங்காய்ப்பூ' என்றார். 'தேங்காய்ப்பூ' என கேட்ட மாத்திரத்தில் வந்து விட்டதே என அனைவரும் வியந்தனர். உருண்டை போல இருந்த பூவின் மெல்லிய பகுதியை தொட்டுப் பார்த்து, 'இந்த மூடிகளை அந்தப் பையன்கிட்ட கொடு' என்றார்.
தாயும் மகனும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். அவர்களிடம், 'வெயிலில் லேசா உலர்த்திட்டு சாப்பிடு. புண் சீக்கிரமே ஆறிடும்' என்றார் மஹாபெரியவர்.
வாய்ப்புண்ணால் அவதிப்படும் சிறுவன் தேங்காய்ப்பூவில் சிறிதளவு சாப்பிட்டான். பூவின் தித்திப்பில் அவனது முகம் பிரகாசித்தது. ஒரு மணி நேரம் கடந்திருக்கும். மீண்டும் அச்சிறுவன் மடத்திற்குள் ஓடி வந்து சுவாமிகளிடம், 'வாயில் இருந்த புண் சரியாயிடுச்சு' என்றான் பூரிப்புடன். மஹாபெரியவர் கொடுத்த பிரசாதம் அல்லவா அது... உடனடி பலனை அது காட்டத் தானே செய்யும்!
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்.
* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திரு.
* சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும்.
* முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்swami1964@gmail.com