
பாமரர் ஒருவர் காஞ்சி மடத்திற்கு வந்தார். வேட்டியின் மீது இடுப்பில் துண்டை சுற்றியபடி வந்தவர் தடாலென விழுந்து, 'சாமி... நீங்களே கதி' என அழுதார்.
அருகே நின்ற தொண்டரிடம், 'என்னன்னு கேளு' என்றார் மஹாபெரியவர்.
'என் பேரு கன்னையன். என்னோட கிராமத்துல ஒரு கிரிமினல் கேஸ். அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை சாமி. ஆனால் போலீசார் என்னையும் கைது பண்ணிட்டாங்க. ஆனா, 'என்னை குற்றவாளி இல்லை'ன்னு சொல்லி கோர்ட் விடுதலை பண்ணிடுச்சு. என் மீது தப்பு இல்லைன்னு ஊருக்கும் புரிஞ்சிருச்சு. ஆனா போலீஸ்காரங்க என்னை விடமாட்டேங்கிறாங்க. எங்கு தப்பு நடந்தாலும் கைது பண்ணி கோர்ட்டுக்கு இழுக்குறாங்க... இப்படி மூணு தடவை கைது பண்ணிட்டாங்க சாமி. அப்பப்ப போலீஸ் தேடி வர்றதை நினைச்சா அவமானமா இருக்கு சாமி. இதில் இருந்து நீங்கதான் காப்பாத்தணும்' என சொல்லி அழுதார்.
'நீ சொன்ன விஷயத்தை அப்படியே எழுதி கலெக்டர், கவர்னருக்கு மனு அனுப்பு. 'தேவை இல்லாமல் போலீஸ் அப்பப்ப வந்து விசாரிக்குதுன்னு எழுது. மேலிடத்தில் இருந்து விசாரிக்க வருவாங்க' என சொல்லி பிரசாதம் கொடுத்தார் மஹாபெரியவர்.
'சரிங்க சாமி' என கன்னையன் புறப்பட்டார்.
மறுநாளே கலெக்டர், கவர்னருக்கு மனு தயாரித்து அனுப்பினார்.
மனுவின் கடைசியில் ஒரு வரி சேர்த்தார். அதுதான் ஹைலைட்!
அதென்ன வரி...
'நகல்: காஞ்சி மஹாபெரியவர், காஞ்சி காமகோடி பீடம்' என எழுதினார்.
அறிவுரை சொன்னவருக்கு, 'நீங்க சொன்னபடி செஞ்சுட்டேன் எஜமான்' என தெரிவிக்க வேண்டாமா?
அதன்படி நகல் மஹாபெரியவருக்கும் வந்தது.
பின் நடந்ததுதான் ஆச்சரியம்... மனுவை அனுப்பிய பிறகு கன்னையன் வீட்டுக்கு போலீஸ் வரவே இல்லை.
யாரிடம் விசாரித்து மேல் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்?
காஞ்சி மஹாபெரியவருக்கே வெளிச்சம்!
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய்.
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று; உன் கஷ்டம் தீரும்.
* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.
* உன் முன்னோரை காப்பாற்றிய குலதெய்வம் உன்னையும் காக்கும்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com