ADDED : அக் 17, 2024 11:18 AM

ஒருசமயம் பாற்கடலில் பெருமாள் துயிலும் போது அரக்கர்களான மது, கைடபர் இருவரும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களைக் கடத்த முயன்றனர். அரக்கர்களைக் கண்டு பயந்த பூதேவி பெருமாளின் திருவடியிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் தஞ்சம் அடைந்தனர்.
அரக்கர்களால் பெருமாளின் நித்திரை கலையக் கூடாதே என வருந்திய ஆதிசஷேன், தன் வாயில் இருந்து விஷத்தை உமிழ அவர்கள் பயந்தோடினர். விஷயம் அறிந்த பெருமாள் ஆதிசஷேனின் செயலைப் பாராட்டினார். இதன் பின்னணியில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெருமாள் கோயில் உள்ளது.
கதை சொல்லும் கருவறையாக மலையுடன் கூடிய குகையில் சன்னதி உள்ளது. பெருமாளைச் சுற்றி கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேய மகரிஷி, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், கின்னரர்கள் சூழ்ந்திருக்க பாற்கடல் காட்சியே கண் முன் விரிகிறது. திருமெய்யம் எனப்பட்ட இத்தலம் தற்போது 'திருமயம்' எனப்படுகிறது.
