
பண்ணையார் வீட்டில் வேலை செய்யும் இளைஞன் கார்த்திகேயன். அவனுக்கு அண்ணாமலையார் இஷ்ட தெய்வம். ஒவ்வொரு கார்த்திகை திங்கட்கிழமை அன்றும் விரதமிருக்க அவன் தவறியதில்லை.
திருவண்ணாமலை கோயிலுக்கு பண்ணையார் அடிக்கடி குடும்பத்துடன் செல்வார். வந்ததும் கார்த்திகேயனிடம் பிரசாத்தை கொடுப்பார். அதிலுள்ள திருநீறை பத்திரப்படுத்தி தினமும் நெற்றியில் பூசுவான்.
ஒருநாள் இரவு படுத்திருந்த போது, ''அண்ணாமலையாரே! பண்ணையார் மாதம் தோறும் உன்னை தரிசிக்க தவற மாட்டேங்கிறாரு. அது அவர் செய்த புண்ணியம். என்னைப் போல கூலி ஜனங்க உன்னை என்னைக்கு தரிசிக்கப் போறோமோ தெரியலையே! என் வாழ்நாளுக்குள் ஒருமுறை உன்னை தரிசிக்கும் பாக்கியம் வேணும்! நடந்தே வரக் கூட தயாராக இருக்கேன். ஆனால் பண்ணையார் கொடுக்கிற கூலி போய் விட்டால் என் குடும்பம் பசியால் வாடுமே! அவர் அனுமதிச்சா தானே வர முடியும்? நீ தான் எனக்கு வழி காட்டணும்'' என வேண்டினான்.
கார்த்திகை மாதம் பிறந்தது. விரதமிருந்த கார்த்திகேயன் மாலையில் உள்ளூர் சிவன் கோயிலுக்குச் சென்றான். அங்கு பக்தி சொற்பொழிவு நடந்தது. தரையில் துண்டை விரித்து அமர்ந்தான். சிவனின் திருவிளையாடல் என்பதால் ஆர்வமுடன் கேட்டான்.
''அண்ணாமலையாரை தரிசிக்க எறும்பு ஒன்று ஆசைப்பட்டது. ஆனால் அதற்கு எளிதான விஷயமா! ரொம்ப வருத்தப்பட்டது. இந்நிலையில் பசு மாடு ஒன்று தன் நண்பனிடம் அண்ணாமலையாருக்கு சோமவாரத்தன்று நடக்கும் பூஜைக்கு செல்வதாக கூறியதைக் கேட்டது.
எறும்பின் புத்தி வேகமாக வேலை செய்தது. உடனே அதன் வால் மீது ஏறியது எறும்பு. சன்னதி வந்ததும் பசுவின் வாலில் இருந்து கீழே இறங்கியது. பிறகென்ன! மெதுவாக ஊர்ந்து சென்று தரிசித்தது. இந்த எறும்பு போல மனதார யார் வேண்டினாலும் அதை அண்ணாமலையார் நிறைவேற்றுவார்'' என்றார் சொற்பொழிவாளர். இதைக் கேட்ட கார்த்திகேயனும் மனதிற்குள் மகிழ்ந்தான். தனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என வேண்டினான். அடுத்த வாரத்திலேயே பண்ணையார், ''வீட்டுக்குப் போய் வேட்டி, சட்டை எடுத்துட்டு வா.
வழக்கமா எனக்கு உதவி செய்ய வர்ற கந்தன் மனைவிக்கு பிரசவமாம். அவசரமா ஊருக்குப் போயிட்டான். நீ தான் என் கூட வரணும்! கார்த்திகை சோமவாரத்தன்று நாம் அண்ணாமலையாரை தரிசிக்கணும்'' என்றார். பண்ணையாரின் பேச்சு கார்த்திகேயன் காதில் தேனாகப் பாய்ந்தது.

