
ஜன.18 - தை அமாவாசை
சோழநாட்டில் காவிரிக்கரையிலுள்ள சிவத்தலம் திருக்கடையூர். இங்கு வாழ்ந்த சுப்பிரமணியம் (அபிராமி பட்டர்) என்பவர் அம்பிகையின் பக்தராக இருந்தார். ஒளி வடிவாக அம்பிகை தரிசிக்கும் பேறு பெற்றவர் இவர். இவரது தெய்வீக அனுபவத்தை உணராத சிலர் 'பித்தர்' என வசை பாடினர்.
இவரது காலத்தில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு முதலாம் சரபோஜி மகாராஜா ஆட்சி செய்தார். அவர் ஒருமுறை தை அமாவாசையன்று திருக்கடையூர் கோயிலுக்கு வந்தார். அப்போது அபிராமிபட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் இருந்த பட்டரைக் கண்டு, “இவர் யார்?” எனக் கேட்டார் மன்னர். அங்கிருந்தவர்கள் “இவர் ஒரு பித்தர்” என பழி சுமத்தினர். ஆனால் மன்னர் அதை நம்பவில்லை. தரிசனம் முடித்து புறப்படும் போது,''பட்டரே! இன்று என்ன திதி?'' எனக் கேட்டார். பக்தி பரவசத்தில் இருந்த பட்டர், 'இன்று பவுர்ணமி' என தவறாக பதிலளித்தார்.
மன்னர் சென்ற பின்னர் தியானத்தை விட்டு எழுந்த பட்டர் நடந்ததை அறிந்தார். ஊர் பழிப்பதை நிரூபிப்பது போல தானும் நடந்து கொண்டதை எண்ணி வருந்தினார். பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என வேண்டினார்.
அபிராமி சன்னதியின் முன் ஆழமான குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீயை மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நுாறு கயிறுகளாலான உறியையும் கட்டி அமர்ந்தார். அம்பிகையின் அருள் கிடைக்காவிட்டால் தீயில் விழுந்து உயிர் துறப்பேன்'' என சபதமிட்டு அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் உறியின் ஒவ்வொரு கயிறாக அறுத்துக் கொண்டே வந்தார். 79வது பாடலான
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
என பாடிய போது அபிராமி தான் அணிந்திருந்த 'தாடங்கம்' என்னும் காதணியை கழற்றி வானில் வீசி எறிந்தாள். அது பவுர்ணமி நிலவாக பிரகாசித்தது. அப்போது ''பட்டரே! நீர் வாய் தவறி சொன்னாலும் அதையே உண்மை என நிரூபித்து விட்டேன். பாடலைத் தொடர்ந்து பாடி நிறைவு செய்க'' என ஆணையிட்டாள் அபிராமி. இந்த பாடல்களின் தொகுப்பே 'அபிராமி அந்தாதி' எனப்படுகிறது. சரபோஜி மகாராஜா பொன்னையும் பொருளையும் அபிராமி பட்டருக்கு மானியமாக வழங்கினார்.

