
“அப்பா நீங்கள் செய்வது நியாயமா? நன்றாக நடக்கும் வியாபாரத்தை ஏன் நிறுத்துகிறீர்கள். இந்த உலகமே பணம் என்ற அச்சாணியில் தான் சுற்றுகிறது” என ஆறு மகன்கள் கெஞ்சினர்.
தந்தை ஜெயந்த் அவர்களிடம், “நீங்கள் பணத்தை தவறான வழியில் செலவழிக்கிறீர்கள். மகாவிஷ்ணுவின் பக்தன் நான் என்பதை ஊரே அறியும். நீங்களோ நாத்திகம் பேசுகிறீர்கள். நான் சம்பாதித்த பணத்தில் பாதியை தர்மத்திற்கு ஒதுக்குவோம்” என்றார்.
கோபம் வரவே தந்தையைத் திட்டினர்.
மூத்த மகன், “அரசனிடம் புகார் செய்வோம்” என தம்பிகளுடன் அரசவைக்குச் சென்றான்.
“மன்னா! எங்கள் தந்தை செய்த வியாபாரத்தை நிறுத்தி விட்டார். தான் சேர்த்த பணத்தையும் தர மறுக்கிறார்” என்றான் மூத்தவன்.
ஜெயந்தை அழைத்து வர அரசன் உத்தரவிட்டான்.
கம்பீரமாக வந்த அவரின் நெற்றியில் நாமம் ஜொலித்தது. வணக்கம் தெரிவித்த அவரிடம், “நீர் உம்மிடம் உள்ள பணத்தை மகன்களிடம் தர மறுத்தீரா” எனக் கேட்டார் அரசர்.
“மன்னா! பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். இறக்கும் போது என்ன கொண்டு செல்லப் போகிறோம். நம் செயல்களே நம்முடன் கூட வரும். பகவான் கொடுத்த பணத்தில் தர்மம் செய்வதில் என்ன தவறு” என்றார் ஜெயந்த்.
அரசன் மேலும் கேள்வி கேட்க ஜெயந்த் தர்க்க ரீதியாக பதிலளிக்கத் தொடங்கினார்.
அதை உணராத அரசர், 'இவர் மனநிலை சரி இல்லாதவர்' எனச் சொல்லி சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.
சிறிது நேரத்தில் ஒரு யோசனை தோன்றியது. மனநிலை சரியில்லாதவரை சிறையில் அடைப்பதை விட கொல்வது மேல் என முடிவு கட்டினான்.
''இவரை சாக்கில் கட்டி குளத்தில் எறியுங்கள்” என்றான். காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்ட ஜெயந்த் அன்றிரவு சிறையில் அடைக்கப்பட்டார்.
“பெருமாளே! தானம் கொடுப்பது பாவம் என்றால் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றார். மறுநாள் காவலர்கள் அவரை சாக்கில் கட்டி குளத்திற்கு எடுத்து சென்றனர். இந்த செய்தி ஊர் எங்கும் பரவியது. மக்கள் கூடினர்.
“ஏழைகளுக்கு உதவும் நல்ல மனிதருக்கு இப்படி ஒரு தண்டனையா? அரசருக்கு புத்தியில்லாமல் போனதா” என தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இருந்தாலும் எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. சாக்கிற்குள் இருந்த ஜெயந்த், “எனக்கு இனி பிறவி வேண்டாம். ஒருவேளை மீண்டும் பிறந்தால் உன்னை மறவாத மனம் வேண்டும்” என பிரார்த்தித்தார்.
காவலர்கள் மூடையை குளத்திற்குள் வீசினர். ஆனால் அப்போது அதிசயம் நடந்தது. ஜெயந்த் இருந்த மூடை மூழ்குவதும், வெளியே தெரிவதுமாக இருந்தது. சிறிது நேரத்தில் அங்குள்ளவர்களின் கண்கள் கூசின. பொன் நிறம் கொண்ட ஆமை முதுகில் மூடையைச் சுமந்தபடி கரைக்கு வந்தது.
அரசருக்கு தகவல் செல்ல, அவன் ஓடி வந்தான். மூடையை அவிழ்த்த போது, அதில் ஜெயந்த் பத்மாசனத்தில் இருந்தார். அவரின் காலில் அனைவரும் விழுந்து வணங்கினர். பெருமாளே கூர்ம(ஆமை) வடிவில் வந்து காப்பாற்றியதை அவர்கள் உணர்ந்தனர் 'மகான் ஜெயந்த் வாழ்க' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. இந்த நேரத்தில் கரையில் நின்ற ஆமை நீருக்குள் மறைந்தது. அதன் பின் அரசர் அவரை குருவாக ஏற்றான். இதனால் நாடே பக்தியில் திளைத்தது.

