ADDED : மே 14, 2026 12:14 PM

திருவண்ணாமலையில் ரமணர் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர் ஒருவர் அவரைக் காண வந்தார். அப்போது ரமணரின் வயது 20.
''சுவாமி! துறவிகள் வெள்ளை ஆடை உடுத்தக் கூடாது. தீட்சை பெற்று காவியுடை அணிவது நல்லது. விரும்பினால் தீட்சை பெறுவதற்குரிய ஏற்பாட்டை செய்யட்டுமா?'' என பக்தர் கேட்டார்.
இது பற்றி ஏதும் சிந்திக்காத ரமணர் மவுனமாக இருந்தார். அப்போது அங்கு புத்தக மூடையுடன் முதியவர் ஒருவர் வந்தார். ரமணரிடம் அதை ஒப்படைத்த அவர், சில காலம் கழித்து வந்து பெற்றுக் கொள்வதாகச் சொல்லி புறப்பட்டார். அதில் 'அருணாசல மகாத்மியம்' என்ற புத்தகம் இருப்பதைக் கண்ட ரமணர் எடுத்து புரட்டினார். அதில் ரமணருக்கு பதில் தருவது போல ஸ்லோகம் ஒன்று இருந்தது.
''திருவண்ணாமலையில் வாழ்பவர் யாராக இருந்தாலும் தீட்சை பெறாமலே சிவனருளால் நற்கதி பெற முடியும்'' என்றிருந்தது. அந்த ஸ்லோகத்தை படித்த பக்தரும் தன்னை மன்னிக்குமாறு ரமணரிடம் வேண்டிக் கொண்டார்.
