ADDED : ஜூன் 25, 2026 11:04 AM

அடியாருக்கு நல்லான் என்னும் பக்தரும், அவரது மனைவியும் சிவபக்தர்கள். விவசாயிகளான அவர்கள் சிவ பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்தனர். அவர்களின் புகழ் நாடெங்கும் பரவியது. அவர்கள் வாழ்வில் சோதனை உருவானது.
வயலில் விளைச்சல் குறைந்தது. அடியார்களுக்கு தானம் செய்ய முடியாமல் போனது. வறுமையில் சிக்கிய அவர்கள் கடன் வாங்கி அன்னதானப் பணியைத் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில், யாரும் கடன் தர முன்வரவில்லை. நல்லானும், அவரது மனைவியும் கூட பட்டினியில் வாடினர்.
'உயிர் துறப்பதே மேல்' என்று முடிவெடுத்து மதுரை சொக்கநாதர் சன்னதிக்குச் சென்று, உங்கள் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க இயலாமல் வாடும் எங்கள் உயிரை உம்மிடம் அர்ப்பணிக்கிறோம்” என்றனர்.
அப்போது சிவன் அசரீரியாக தோன்றி, “உங்கள் பக்தியின் மகிமையால், உங்கள் வீட்டில் உள்ள உலவாக்கோட்டை (நெல் சேமிக்கும் களஞ்சியம்) எப்போதும் நிரம்பி வழியும். தர்மத்தைத் தொடருங்கள்,” என்றது. மகிழ்ந்த அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குறைவின்றி அன்னதானம் செய்தனர்.
