ADDED : ஜூன் 25, 2026 11:06 AM

ஒரு நாட்டின் அரசன் மிகவும் நீதிமானாக இருந்தான். சைவ உணவையே உண்பான்.
அவனை எப்படியாவது அசைவம் சாப்பிட வைக்க ஆசைப்பட்டான் அரண்மனை சமையல்காரன். சமையலில் கெட்டிக்காரனான அவன் ஒரு பறவையை சமைத்து சைவ உணவுடன் கலந்து பரிமாறினான். அரசனும் உணவை ரசித்து சாப்பிட்டான்.
இது போல சுவையான உணவே இனி தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டான். சமையல்காரனும் அதன்படியே செய்தான். இந்தக் கதையைச் சொன்னவர் பகவான் கிருஷ்ணர். கேட்டவர் கவுரவர்களின் தந்தை திருதராஷ்டிரன். கதையை சொல்லி முடித்த கிருஷ்ணன், ''திருதராஷ்டிரரே! இப்போது சொல்லும்! இங்கே சமையல்காரன் குற்றவாளியா? ராஜா குற்றவாளியா?'' என்றான்.
திருதராஷ்டிரன் சொன்னார், ''நாட்டின் தலைமைப்பொறுப்பில் இருப்பவன், அனைத்தையும் அறிந்தவனாக இருக்க வேண்டும். சமையல்காரன் செய்தது சிறு குற்றம். ஒரு உணவில் கூட மாற்றம் இருப்பதை அறியாத ராஜா, நாட்டை எப்படி ஆள முடியும்! அவனே குற்றவாளி'' என்றார்.
உடனே கிருஷ்ணர் சொன்னார்.''இதே தவறைத்தான் நீங்களும் செய்கிறீர்கள் திருதராஷ்டிரரே! உங்கள் பிள்ளைகளான கவுரவர்கள் தவறு செய்கிறார்கள் எனத் தெரிந்தும், தடுத்து நிறுத்தாமல் அழிவுக்கு வழிவகுக்கிறீர்கள்'' என்றதும் திருதராஷ்டிரனால் பதில் சொல்ல முடியவில்லை.
