ADDED : ஜூன் 25, 2026 11:10 AM

அரதத்தர் என்னும் சிவபக்தர் கோயிலுக்கு வந்த போது, துாணில் பணிப்பெண் ஒருத்தி கயிற்றால் கட்டப்பட்டிருந்தாள். மக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். கோயில் பொறுப்பாளர் தாசியை சாட்டையால் அடிக்கவே, வலி பொறுக்காமல் அவள் கதறினாள். அவளின் கூக்குரல் கேட்ட பக்தர் மனம் பதைக்க அழுதார்.
''அடித்தது அவளைத் தானே! இவர் ஏன் அழுகிறார்?''என்றாள் ஒரு பெண். அதற்கு அவள் தோழி, ''அவள் மீது அரதத்தர் இரக்கப்படக் கூடாதா'' என்றாள்.
''அடி போடி! பைத்தியக்காரி! நெருப்பில்லாமல் புகையுமா? அரதத்தருக்கும், தாசிக்கும் ரகசிய தொடர்பிருக்கும். அந்த பாசம் தான் கண்ணீராக கொட்டுகிறது'' என்றாள் மற்றொருத்தி.
இப்படி பலரும் பேசும் நேரத்தில், பொறுப்பாளர் அடிப்பதை நிறுத்தினார்.
''ஐயா! தொடர்ந்து இவள் வராததால் கோயில் பணிகள் முடங்கி கிடக்கிறது. அதற்கான தண்டனை தான் இது. இவளுக்காக தாங்கள் ஏன் அழுகிறீர்கள்?'' எனக் கேட்டார்.
அரதத்தர், ''இவளை திருத்தும்படி கடவுள் உங்களை நியமித்திருக்கிறார். ஆனால், நானும் எத்தனையோ நாள் கோயிலுக்கு வராமல் இருந்திருக்கிறேனே... அதற்குரிய தண்டனை அளித்து என்னை திருத்துவது யார் என எண்ணிப் பார்த்தேன். அழுகை வந்தது'' என்றார். இதைக் கேட்ட பொறுப்பாளருக்கு இரக்கம் எழுந்தது. கட்டை அவிழ்த்து விட்டு அவளை பணியில் ஈடுபடச் சொன்னார்.
