ADDED : ஜூலை 09, 2026 10:41 AM

ஒரு குளக்கரையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் சென்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட ஒரு பக்தர்,''குருதேவா! பக்தி மார்க்கத்தில் வெற்றி பெற விரும்புகிறேன். வழிகாட்டுங்கள்'' என்று வேண்டினார்.
''இதோ... இங்கு மீன் பிடிக்க துாண்டில் போடுபவனைப் பார். தினமும் இங்கு வந்து என்ன நடக்கிறது என்று கவனி'' என்று சொல்லி விட்டுப் போனார்.
நான்கு நாளாக தொடர்ந்து வந்த பக்தர், துாண்டில் போடுவதை உன்னிப்பாக கவனித்தார். பின் ராமகிருஷ்ணரைக் காணச் சென்றார். ''குருதேவா... துாண்டில் போடுவதை நான்கு நாள் பார்த்து விட்டேன். இப்போதாவது வழி சொல்லுங்கள்'' என்றார்.
''அது தான் வழி கிடைத்திருக்குமே... இனி நான் சொல்ல என்ன இருக்கிறது?'' என்றார் ராமகிருஷ்ணர் புரியாமல் விழித்தார் பக்தர்.
அவரிடம் ராமகிருஷ்ணர், ''யார் பேச்சு கொடுத்தாலும், மீன் பிடிப்பவனின் கவனம் துாண்டில் மீதே இருக்கும். வெயிலில் காய்ந்தாலும் அவன் சிறிதும் கவலைப்பட மாட்டான். மீன் சிக்கியதும் கரையில் இழுத்துப் போட்டு சந்தோஷப்பட்டிருப்பான் இல்லையா...” என்றார்.
''ஆமாம்... குருதேவா... அது தான் நடந்தது'' என்றார் பக்தர்.
''இது போல வாழ்வில் ஈடுபட்டாலும், மனம் கடவுள் சிந்தனையில் ஈடுபட வேண்டும். பக்தியில் வெல்ல இதுவே வழி'' என்றார் ராமகிருஷ்ணர்.
