ADDED : ஜூலை 09, 2026 10:40 AM

மகான் துகாராமை தரிசிக்க மன்னர் சிவாஜி விரும்பினார். அரண்மனை பணியாளர்கள் மூலம் பல்லக்கு, குதிரை, யானைகளை அவரின் குடிசைக்கு அனுப்பி வைத்தார். பணியாளர்கள், ''சுவாமிஜி! தங்களை தரிசிக்க மன்னர் விரும்புகிறார். விரும்பிய வாகனத்தில், தாங்கள் அரண்மனைக்குப் புறப்பட வசதியாக யானை, குதிரை, பல்லக்குடன் வந்திருக்கிறோம். எதில் வேண்டுமானாலும் நீங்கள் வரலாம்''என்றனர்.
''வாகனம் எதுவும் தேவையில்லை. கடவுள் கொடுத்த கால்கள் எனக்கு போதும். நடந்தே வருகிறேன். ஆனால், இப்போது பூஜை செய்து கொண்டிருக்கிறேன். வர இயலாதே,” என்றார்.
“தேடி வந்த ராஜ உபசாரத்தை மறுக்கும் இவர் மன்னரின் கோபத்திற்கு ஆளாகப் போகிறார்” என நினைத்த பணியாளர்கள், மன்னரிடம் போய் விஷயத்தை சொன்னார்கள்.
சிவாஜிக்கு கோபம் வரவில்லை. மாறாக, துகாராமிற்கு காணிக்கை அளிக்க பணமுடிப்புடன் குதிரையில் புறப்பட்டார்.
“சுவாமிஜி...தவறுக்கு மன்னியுங்கள். தங்களைத் தரிசிக்க, நான் முதலிலேயே வந்திருக்க வேண்டும்,” என்றார்.
“ தவறு செய்தவனை தானே மன்னிப்பதற்கு?” எனச் சொன்ன துகாராம், மன்னரை தழுவிக் கொண்டார்.
சிவாஜி, ''சுவாமி... இந்த காணிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என பணமுடிப்பை கொடுத்தார்.
''பணத்தாசையில் சிக்கினால் பக்தி பயன்படாது'' எனச் சொல்லி ஏற்க மறுத்தார். அதன்பின் சிவாஜி அந்த பணத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தார்.
