ADDED : ஆக 27, 2026 08:22 AM

அரைக்காசு என்ற பெயருள்ள கூலித்தொழிலாளி இருந்தான். அவன் பெயரில் இருந்த அரைக்காசு கூட அவன் கையில் தங்க மறுத்தது. அந்த அளவுக்கு ஏழை. மூத்ததேவி என்னும் ஜேஷ்டாதேவி அவன் முன் தோன்றி, ''மகனே... கவலை வேண்டாம் உனக்கு தேவையான பணம் தருகிறேன்'' என பொற்காசு குவியலை வழங்கி மறைந்தாள். அரைக்காசு மகிழ்ச்சியில் குதித்தான்.
துாங்கிய மனைவி கமலாவை எழுப்பி நடந்ததைச் சொன்னான். காசைப் பத்திரப்படுத்தும் முன், அதை அவள் அளந்து பார்க்க விரும்பினாள். உடனடியாக பக்கத்து வீட்டு விமலாவின் கதவைத் தட்டி, அளந்து பார்க்க நாழி (படி) கேட்டாள்.
''அர்த்த ராத்திரியில் என்ன அளக்கப் போகிறாள் இவள்?'' என சந்தேகித்த விமலா யாருக்கும் தெரியாமல் நாழியின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி கொடுத்தாள். வேகமாக பொற்காசை அளந்த கமலா, இரவோடு இரவாக நாழியை திருப்பிக் கொடுத்தாள். அதன் அடிப்பக்கம் பொற்காசு ஒட்டியிருந்ததை கமலா கவனிக்கவில்லை.
கமலாவின் வீட்டில் பொற்காசுகள் இருப்பதை யூகம் செய்த விமலா, அதை அடைய ஆசைப்பட்டாள். கமலாவின் வீட்டிற்குள் புகுந்து திருடினாள். திருட்டு போனதை அறிந்த அரைக்காசுவும், கமலாவும் திகைத்தனர். வழக்கம் போல, அரைக்காசு கூலி வேலைக்கு சென்றான். வழியில் காட்சியளித்த ஜேஷ்டாதேவியிடம் பொற்காசு திருடு போனதை தெரிவித்தான்.
''வருந்தாதே... இந்த வைர மோதிரத்தை வைத்து பிழைத்துக் கொள்'' என மீண்டும் உதவினாள். மோதிரத்தை விரலில் அணிந்த அரைக்காசு, ஆற்றில் நீச்சல் அடித்த வேகத்தில் மோதிரம் நீருக்குள் நழுவியது. தன்னால் உதவ முடியாததை உணர்ந்த ஜேஷ்டாதேவி, தன் தங்கையான மகாலட்சுமியிடம் விஷயத்தைச் சொன்னாள். நேரில் தோன்றி ஒரு பொற்காசினை அரைக்காசுவுக்கு வழங்கி விட்டுக் கிளம்பினாள் மகாலட்சுமி.
அதை விற்ற அரைக்காசு மனைவியுடன் சந்தைக்குப் போனான். சமைக்கத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய்,விறால் மீன் என அனைத்தும் வாங்கி வந்தான். கமலா மீனை நறுக்கிய போது, அதன் வயிற்றுக்குள் வைர மோதிரம் ஜொலிப்பதைக் கண்டான்.
''ஆ... பாத்துட்டேன்! பாத்துட்டேன்'' என மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியில் அரைக்காசு கத்தினான்.
அப்போது திருடிய பொற்காசுகளை சரி பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு விமலா பதறிப் போனாள். தன்னுடைய திருட்டுத்தனம் வெளியில் தெரிந்து விடுமே என்ற பயத்தில், பொற்காசுகளை ஒப்படைத்ததோடு மன்னிப்பும் கேட்டாள்.
அவளிடம் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என அறிவுரை சொன்னான். பிறகு இழந்த பொற்காசுகள் கிடைத்ததற்காக அக்கா தங்கையான மூத்த தேவி, மகாலட்சுமியை நன்றியுடன் வணங்கினான் அரைக்காசு.
