ADDED : மார் 20, 2025 01:23 PM

இடையூறுகளை நீக்கும் க்ஷிப்ர கணபதி
க்ஷிப்ரம் என்ற சொல்லுக்கு விரைவு என்று பொருள். கலியுகத்தில் கணபதியும் சண்டிதேவியும் விரைந்து அருள்வர் என மந்திர சாத்திரம் கூறுகிறது.
ஒடித்த தந்தம், கற்பகக் கொடி, பாசம், அங்குசம், ரத்தின கும்பம் ஆகியவற்றை ஏந்தியவராய், மனம் கவரும் வகையிலான செம்பருத்திப்பூ போன்ற சிவந்த நிறமுடையவராய் காட்சியளிப்பவர் க்ஷிப்ர கணபதி.
தியான சுலோகம்
தந்த கல்ப லதா பாச ரத்நகும்பாங் குசோஜ்வலம் |
பந்தூக கமநீயாங்கம் த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம் ||
தந்த - தனது ஒடித்த தந்தத்தையும்
கல்பலதா - தேவலோக கற்பக மரக் கொடியையும்
பாச - பாசக் கயிற்றையும்
ரத்நகும்ப - நவரத்ன நிதி கலசத்தையும்
அங்குச - அங்குசம் எனும் ஆயுதத்தையும்
உஜ்வலம் - (ஐந்து கரங்களில் ஏந்தி) மனம் கவரும்படியான பொலிவு உள்ளவரும்
பந்தூக - செம்பருத்திப் பூப்போன்று சிவந்த நிறத்தில்
கமநீயாங்கம் - மனம் கவரும் பேரழகுத் தோற்றம் உடையவருமான
க்ஷிப்ரகணாதிபம் - க்ஷிப்ர கணபதியை (விரைந்து பயனளிப்பவரை)
த்யாயேத் - தியானிக்க வேண்டும்
ஒடித்த தந்தம்: துாய்மையையும் உறுதியையும் துணையாகக் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.
ரத்த கும்பம்: அனைத்து செல்வங்களையும் தருபவர் என்பதை இக்கும்பம் உணர்த்துகிறது.
கற்பக மரக் கொடி: அடியவர்கள் வேண்டுவதை வேண்டியபடியே அருளும் கருணை உள்ளம் கொண்டவர் என்பதை இவ்வதிசய மரக்கொடி காட்டுகிறது.
பாசம் & அங்குசம்: உயிரின் ஆணவ மலத்தை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தைக் குறிப்பது அங்குசம்.
பலன்: அனைத்து இடையூறுகளும் நீங்கும். தாமதம் மற்றும் இழுபறி நீங்கி வெற்றி கிட்டும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்