ADDED : ஏப் 17, 2025 11:58 AM

ஞானம் அருளும் ஹேரம்ப கணபதி
பரமேஸ்வரனின் அம்சமாக ஸதாசிவரின் வடிவில் ஐந்து முகங்களும் பத்து கைகளும் பகொண்டு விளங்கும்வர் இவர். கணபதியின் மிகப் பிரசித்தமான வடிவங்களில் இதுவும் ஒன்று. ஹேரம்பம் என்றால் கூர்மையான பற்களையுடைய மிருகம். அதாவது சிங்கம் என்று பொருள். இந்த இடத்தில் எல்லா தெய்வங்களையும் விட உயர்ந்த தெய்வம் என்ற பொருள் தரும். வலது இடது முன்னிரு கைகளில் வரத, அபய முத்திரைகளையும், பின் இருபக்க எட்டு கைகளில் தந்தம், உலக்கை, ஜபமாலை, பாசம், மாம்பழம், அங்குசம், கோடரி, மோதகம் ஆகியவற்றையும் ஏந்தியவராய், பளிங்கின் வெண்மை நிறம் கொண்டவராய், பராசக்தியின் வாகனமாகிய சிம்மத்தில் அமர்ந்தவராய் காட்சியளிப்பவர்.
தியான சுலோகம்
அபய வரத ஹஸ்த: பாச தந்தாக்ஷமால: - ஸ்ருணி பரசு ததாந: முத்கரம் மோதகம் ச |
பல மதிகத ஸிம்ஹ: பஞ்ச மாதங்க வக்த்ர: - கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப நாமா ||
அபய வரத ஹஸ்த: - அபய வரத முத்திரைகளுடனான இருகைகளை உடையவரும்
பாஸ த ந்தாக்ஷமால - பாசம், தந்தம், அக்ஷ மாலை இவற்றை உடையவரும்
ஸ்ருணி பரசு - அங்குசம், கோடரியோடு
முத் கரம் - இரும்பு உலக்கையையும்
மோதகம் - மோதகத்தையும்
பலம் ச - பழத்தையும்
த'தா'ந: - தனது 10 கைகளில் வைத்திருப்பவரும்
அதி'க'த ஸிம்ஹ: - சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவரும்
பஞ்ச மாதங்க வக்த்ர: - ஐந்து யானை முகங்களை உடையவரும்
அதிகௌ'ர: - மிகவும் தூய பளிங்கைப் போன்ற வெள்ளை நிறத்தவரும்
ஹேரம்ப நாமா - ஹேரம்பன் என்ற பெயர் உடையவருமான
கணபதி -கணபதியானவர்
பாது - (நம்மைக்) காக்கட்டும்
சிம்ம வாகனம்: அறத்தையும் ஞான வைராக்கியத்தையும் உணர்த்துகிறது
அபயம், வரதம் : உயிர்களின் பயங்களை நீக்கி, வரங்களை அருள்வதைக் காட்டும் முத்திரைகள் இவை
பாசம் : தாயின் ஆயுதமான பாசம். உயிர்களின் ஆணவத்தை நீக்குவது.
தந்தம்: துாய்மையையும் உறுதியையும் துணைகொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது
ஜபமாலை: இறைவனின் மறைப்பாற்றலைக் குறிப்பது ஜபமாலை.
மழு: பிறவிப் பிணியை வெட்டித் தறிப்பது மழு. அகந்தையை அகற்றுவது
அங்குசம்: உயிர்களிடம் படிந்துள்ள அழுக்காகிய ஆணவத்தை அகற்றுவதன் அடையாளம் அங்குசம்.
இரும்பு உலக்கை: உயிர்களைப் பிணைத்திருக்கும் மும்மலங்களையும் நீக்க வல்லவர் கணபதி என்பதை குறிப்பது
மோதகம்: இனிப்பானது. உயிர்களுக்கு நிரந்தர இன்பமான வீடுபேற்றைத் தருபவர் கணபதி என்பதை உணர்த்துவது
அனைத்து காரியங்களும்: நிறைவேறும். இடையூறுகள் நீங்கும். ஞான வைராக்கியம் கிடைக்கும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்