ADDED : அக் 02, 2025 11:50 AM

சங்கடங்கள் நீக்கும் சங்கடஹர கணபதி
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லை, இன்னல், சிக்கல் என்று பொருள். சங்கடங்களை நீக்குபவர் இந்த கணபதி.
தியான சுலோகம்
பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்த சோபாட்யாம்| தக்ஷேங்குச வரதாநம் வாமே பாசஞ்ச பாயஸம் பாத்ரம் நீலாம்சுக லஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்- ஸங்கடஹரணப் பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்II
பாலார்க - இளஞ்சூரியன் போன்று
அருண காந்தி: - ஒளிரும் சிவந்த நிறத்தவரும்
வாமே - இடதுபக்கத்து
அங்கே - மடி மீது
லஸத் - பிரகாசிக்கின்ற
இந்தீவரம் - கருங்குவளைப் பூவை (நீலோத்பலத்தை)
ஹஸ்தாம் - தனது கையில் ஏந்தியவளாயும்
கௌராங்கீம் - வெண்ணிறத்தவளாயும்
ரத்ன சோபாட்யாம் - ரத்தினங்களின் ஒளியுடன் விளங்குபவளாயும் இருக்கின்ற
பாலாம் - இளந்தேவியை
வஹன் - தாங்கியிருப்பவராக (இவரது)
தக்ஷே - வலதுபக்க (இரு கைகளில்)
அங்குச - அங்குசம் எனும் ஆயுதத்தையும்
வரதாநம் - வரத முத்திரையையும்
வாமே - இடதுபக்க (இரு கைகளில்)
பாசம் - பாசம் எனும் ஆயுதத்தையும்
ச - இவற்றோடு
பாயஸ பாத்ரம் - பாயச பாத்திரத்தையும் (ஏந்தியிருப்பவரும்)
நீலாம்சுக: - நீலநிறப் பட்டாடையை அணிந்தவரும்
லஸமாந: - நன்கு பிரகாசிப்பவரும்
பத்மாருணே - செந்தாமரை வடிவமான
பீடே - இருக்கையில்
திஷ்டந் - நின்ற நிலையில் இருப்பவருமான
ஸங்கடஹரண: - சங்கடத்தை நீக்குபவரான
கஜாநந: - யானை முகமுடையவரான சங்கடஹர கணபதியானவர் (நம்மை)
ஸங்கடபூகாத் - சங்கடங்களாகிய கூட்டத்தில் இருந்து
பாயாத் - பாதுகாக்கட்டும்
தேவி: விநாயகப் பெருமானின் திருவருள்.
அதாவது சக்தி. இருவரும் பிரிக்க முடியாதவர்கள்.
வரதம்: உயிர்கள் வேண்டும் வரங்களை அருள்பவர் கணபதி என்பதைக் குறிப்பது.
அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது
பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.
பாயசம்: உயிரின் பக்குவ ஞானத்தையும், இறைவனின் அருளையும் குறிக்கும்.
பலன்: சங்கடங்கள் நீங்கும்; கேட்கும் வரம் கிடைக்கும்; பாதுகாப்பு ஏற்படும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்