ADDED : ஜன 12, 2024 04:06 PM

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த தம்பதியர், தங்களின் ஒரே மகளுடன் காஞ்சிமடத்திற்கு வந்தனர். தயக்கமுடன் நின்ற குடும்பத் தலைவரிடம், ''என்ன விஷயம்?'' எனக் கேட்டார் மஹாபெரியவர்.
''பெரியவா! எங்களுக்கு ஒரே பொண்ணு. இவளின் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே போகிறது. திருமணம் நடக்க தாங்கள் தான் ஆசியளிக்க வேண்டும்'' என்றார்.
அந்தப் பெண்ணிடம், ''உன் பெயர் என்னம்மா?'' எனக் கேட்டார் சுவாமிகள்.
''ராதா''
''உங்கள் ஊரில் பெருமாள் கோயில், சிவன் கோயில் இருக்கா?''
''இருக்கு சுவாமி''
''சரி... மார்கழி மாதம் அதிகாலையில் நீராடி வாசலில் கோலமிடு. பெருமாள் கோயிலுக்குப் போய் திருப்பாவை பாடு, சிவன் கோயிலில் திருவெம்பாவை பாடு. உன்னால் போக முடியாத நாள் வருமில்லையா! அப்போது வீட்டில் இருந்தபடியே பாசுரங்கள் பாடு'' என ஆசியளித்தார்.
ராதாவும் அதனை கடைபிடித்தாள். தை பிறந்தது. ஒரு வெள்ளிக்கிழமையன்று பெரியவர் ஒருவர் மனைவியுடன் பெண் கேட்க வந்தார்.
''எங்கள் பூர்வீகம் கேரளா பாலக்காடு. என் மகனின் ஜாதகமும், உங்கள் பெண்ணின் ஜாதகமும் பொருத்தமாக உள்ளன'' என்றார். திருமணப்பேச்சு நடந்தது. திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்னதாக ஒருநாள் மஹாபெரியவரிடம் ஆசி பெற பெற்றோருடன் காஞ்சிபுரம் சென்றாள் ராதா. அவளிடம், ''உன் பெயர் ராதா தானே! உனக்கு வரப் போகும் மாப்பிள்ளையின் பெயர் என்ன?'' எனக் கேட்டார் மஹாபெரியவர்.
''கண்ணன்'' என்றாள். ''உன் மாமனார் பெயர் பரமேஸ்வரனா?'' எனக் கேட்டார்.
''ஆம் சுவாமி'' என்றாள் ஆச்சரியத்துடன்.
''மாமனார் பெயர் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?'' என்று அவள் யோசித்த போது, '' திருப்பாவை படித்தாய்; கணவராக கண்ணன் வந்தான். திருவெம்பாவை படித்தாய்; மாமனாராக பரமேஸ்வரன் வந்து விட்டார்'' என்று சொல்லி புன்னகைத்தார்.
இதைக் கேட்ட அனைவரும் மெய்மறந்தனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.