தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொல்லச் சொல்ல இனிக்குதடா - 2

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 2

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 2


ADDED : ஜூன் 27, 2024 12:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2024 12:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 அமிர்த கலச முருகன்

பூஜையறையில் இருந்த காமாட்சியம்மன் விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தார் பாட்டி.

“என்ன பாட்டி, காபி குடிச்சாச்சா?” வாசலில் நுழையும் போதே விசாரித்தபடி வந்தான் யுகன்.

“குடிச்சிட்டேன் யுகா. உன் பொண்டாட்டி தேவந்தி இருக்காளே... வேளா வேளைக்கு கவனிச்சுக்குறா. மதியம் ஒரு மணி ஆச்சுனா சாப்பிட வாங்கன்னு தொல்லை பண்றா. அதே மாதிரி சாயந்திரம் சுடச்சுட காப்பி டம்ளர நீட்டிடுரா. ஆமா, நீ சாப்பிட்டியாடா''

“ஆபீசுல சுண்டல் சாப்பிட்டேன் பாட்டி என்றபடியே பையில் இருந்த சில புத்தகம், டிபன் பாக்சை மேசை மீது வைத்தான். அதை பார்த்ததும் அவனிடம், ''பொன்னியின் செல்வன் கதை படித்திருக்கிறாயா'' எனக் கேட்டாள்.

“படிச்சிருக்கேன்'' என்றான்

''சரி ஒரு கேள்வி கேட்கிறேன்; பதில் சொல்லு பார்ப்போம்'' என்றாள் பாட்டி

“ ஐயோ பாட்டி... கேளு தெரியுதான்னு பார்ப்போம்”

''இந்த பொன்னியின் செல்வன் கதையோட இரண்டாம் பாகத்தில நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோயில் சொல்லப்பட்டு இருக்கு. அது எது தெரியுமா?”

“கஷ்டமான கேள்வியைக் கேக்குற. அமுதன் முன்னாடி என்னை எதையும் கேட்காத. அப்புறம் நான் முழிக்கிறதை பார்த்தா மதிக்க மாட்டான்”

“ அடேய்! முதல்ல தெரியுமா தெரியாதான்னு சொல்லு'' என பாட்டி கேட்டாள்.

“இதுவும் முருகன் கோயிலா?”

“ ஆமா, திருவண்ணாமலை மாதிரி அப்பனும், மகனுமா சேர்ந்திருக்கும் கோயில்”

“பாட்டி, சிவனும் முருகனும் ஏகப்பட்ட கோயிலில் சேர்ந்திருக்காங்கன்னு நீ சொன்ன பிறகு தான் தெரிய வந்துச்சு. அதனால நீயே சொல்லு”

“ம்... கோடியக்கரை''

“ அட ஆமா... பொன்னியின் செல்வன்ல இந்த ஊரைச் சொல்லுவாங்களே''

“ஆமாண்டா, கோயில் இருக்கும் இடம் கோடியக்காடு, பக்கத்துல இருக்கிற கடல் தான் கோடியக்கரை. பூங்குழலி இந்த கோயிலுக்கு அடிக்கடி வந்ததாகவும், அவள் இங்கிருந்து படகில் வந்தியத்தேவனை இலங்கைக்கு கூட்டிட்டு போனதாகவும் பொன்னியின் செல்வன் கதையில இருக்கு.

கோடியக்கரை கோயில குழகர் கோயில்னு இப்போ சொல்றாங்க. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தை பருகினாங்க. பிறகு மீதம் இருந்த பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தாங்க. அவர் செல்லும் போது, கையில் இருந்த அமுத கலசத்தை கைப்பற்ற அசுரர்கள் முயற்சி செய்தாங்க. பயந்து போன வாயுதேவன் மனதால் முருகனை வணங்கி அமுத கலசத்தை கீழே போட, கிரிக்கெட் பந்தை பிடிக்கிற மாதிரி கையில் பிடிச்சார் முருகர்.”

“பாட்டி... நீ கிரிக்கெட் பாப்பியா?”

“ நான் கிரிக்கெட் விளையாடி இருக்கேன்டா... இந்த பாட்டிய என்ன நினைச்ச?”

“ சரி பாட்டி, நான் வாயே திறக்கலை.'' என பாட்டியிடம் சரணடைந்தான்.

“மேலே இருந்து விழுந்த அமுத கலசத்துல ஒரு துளி தவறி பூமியில் கோடியக்காட்டுல விழுந்து சிவலிங்கமா மாறிச்சு. அதனால இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் வந்தது. இங்குள்ள கிணறு அமிர்த தீர்த்தம். இந்த கோயில்ல நவகிரகம் எல்லாம் ஒரே வரிசையில் இருப்பாங்க. மேற்கு பிரகாரத்தில் தான் நம்ம தலைவர் சுப்பிரமணியர் இருக்கார். இவர் அழகானவர்”

“முருகன்னாலே அழகு தானே பாட்டி! பாடம் எடுக்கும் போது எங்க மிஸ் சொல்லியிருக்காங்க” என கொள்ளுப்பேரன் அமுதன் பிஞ்சு மொழியில் சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வர பாட்டி நெகிழ்ந்தாள்.

“ அட, உன் வாயால கேட்க இன்னும் அழகா இருக்கே! 'முருகு' னு சொன்னா அழியாத அழகுன்னு அர்த்தம். அந்த வகையில முருகை உடையவன் தான் முருகன். முருகன் என்றால் அழகன் என சொல்வது இப்படித்தான். என்ன தேவந்தி, நீயே அமுதனை கூட்டிட்டு வந்துட்டியா?”

“ஆமாம் பாட்டி, முருகர் புராணத்தை எடுத்தாலே நேரம் போவதே தெரியாது. எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு நானே கூட்டி வந்துட்டேன்”

“நல்ல வேலை பண்ண. கோடியக்கரை புராணம் கரை சேராமல் நிக்குதே”

“இப்ப சேரும் பாரு. இந்த கோயில்ல இருக்கிற முருகனுக்கு ஒரு சிறப்பு உண்டு''

'என்ன சிறப்பு?' எனக் கேட்டான் யுகன்.

“ இந்தக் கோயில்ல தான் முருகன் தன் இடது கையில் அமுத கலசம் ஏந்தி காட்சி தருகிறார். இங்க ஒரே முகம் தான். ஆறு கைகள். தன் இடது கையில் அமுத கலசம் இருக்க மற்ற கைகளில் நீலோத்பவம், பத்மம், அபயம், வஜ்ரம், வேல் ஏந்தி இருப்பார். இந்த அமிர்த கலச முருகனை வேறு எங்குமே பார்க்க முடியாது. இங்கு திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது”

“ஓ”

“ இந்தக் கோயிலை குழகர் கோவில் என்றே சொல்றாங்க. இங்குள்ள மூலவர் அமிர்தகடேசுவரர். திருக்கடையூர் மூலவருக்கும் அமிர்தகடேசுவரர் என்று தான் பெயர். ஆனால் இரண்டும் வெவ்வேற கோயில்”

“சரி பாட்டி, இந்த கோயிலையும் உடனே பார்த்து விட்டு வரலாம் போல என தோணுது”

“டேய் யுகா, இந்த கோயில் காட்டுப் பகுதியில் இருக்குது. கவனமா போகணும். பக்தர்களுடைய பாதுகாப்புக்காக 'காடு கிழாள்' என்ற அம்மன் சன்னதியும் முன் மண்டபத்தில் இருக்கு. கோடியக்கரை கடலுக்கு இரண்டு சிறப்புண்டு. இங்கு கடல்ல ஒரு முறை நீராடினால் நுாறு முறை நீராடிய புண்ணியம் சேரும். இந்த கடற்கரையை தமிழகத்தின் மூக்கு முனை என வர்ணிப்பாங்க.”

“ஆமா, பள்ளித்தேர்வின் போது மேப்பில் குறித்த ஞாபகம் வருது பாட்டி”

“கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு சீக்கிரம் போகலாம். ஆனாலும் கோடியக்கரை இலங்கைக்கு பின்புறமாக இருப்பதால் ராமர் இங்கிருந்து கிளம்ப மறுத்தார். இலங்கைக்கு முன்புறமாக போக எண்ணி தனுஷ்கோடிக்கு போனார். சேதுபந்தனம் செய்ய நின்ற இடத்தில் இப்போது ராமர் பாதம் இருக்கு''

“ஓ... அப்படியா”

''அது மட்டுமில்லை. நவகோடி சித்தர்கள் இங்கு வழிபட்டாங்க. இன்றும் சித்தர்கள் வாழ்வதாகவும் சொல்றாங்க. திருவாவடுதுறை குருமூர்த்தியான சித்தர் சிவப்பிரகாசர் இங்கு ஜீவசமாதி அடைஞ்சிருக்காரு அமிர்தகரை சுப்பிரமணியர், கோடிக்குழகர் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த முருகன் நியாயமான கோரிக்கை எதுவானாலும் நிறைவேற்றுவார்”

“சரி பாட்டி, நீ வேற கோயில் இருக்கிற இடம் கோடியக்காடுனு சொல்ற. இந்த காட்டுக் கோயில்ல தினசரி பூஜை உண்டா?”

“உண்டு. காலை 6:30 - மதியம் 12:00 மணி, மாலை 5:00 - இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். கார்த்திகை, சஷ்டியில் விசேஷ பூஜை உண்டு”

“சரி... அருணகிரிநாதர் இந்த குழகேசர் மீது பாட்டுப் பாடி இருக்காரா?”

“ஆமா யுகா, மறந்தே போயிட்டேன் பாரு. இந்த குழகேசர் மீது ஒரு திருப்புகழ் பாடல் இருக்கு.

நீல முகிலான குழலான மடவார்கள்தனநேயமதிலே தினமும் உழலாமல்

நீடுபுவியாசை பொருளாசை மருளாகியலை

நீரிலுழல் மீனதென முயலாமல்...

கோடு முக ஆனைபிறகான துணைவா குழகர்

கோடி நகர் மேவிவளர்...பெருமாளே

இதுதான் அந்தப் பாடல். முருகனை நோக்கி அருணகிரிநாதர் பாடிய மாதிரி சுந்தரரும் மூலவர் சிவனான அமிர்தகடேசுவரர் மீது பதிகம் பாடியிருக்கார். சேரமான் பெருமானோடு சிவபெருமான் இங்கு தனித்து இருப்பதை பார்த்து சுந்தரர் கவலைப்பட்டு பாடியிருக்கிறார். ஆந்தை, கோட்டான் கூக்குரலிடும் இடத்தில் நீ மட்டும் எப்படி இப்படி தனியாக இருக்கிறாய். என்னால் தாங்க முடியவில்லை என கவலையுடன் பாடி இருக்கார்”

“அதான் பாட்டி, எங்களுக்கும் உன்னைப் பத்தி இதே கவலை தான். நாங்க எல்லாம் இங்க சென்னையில சவுகரியமா இருக்கோம். நீ மட்டும் கிராமத்தில் தனியா இருக்கியேன்னு அப்பா, அம்மாவுக்கு மட்டுமல்ல எங்க எல்லாருக்கும் கவலை. நானும் சுந்தரர் போல இப்ப பாட்டு பாடணும் போல”

கதை கேட்டுக் கொண்டிருந்த தேவந்தி, அமுதன் இருவரும் சிரித்து விட்டனர்.

-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்

94430 06882

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us