
தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று சங்கரன்கோயில். இங்குள்ள சுவாமியின் திருநாமம் சங்கரலிங்கர், சங்கரநாராயணர். அம்பாளின் திருநாமம் கோமதி. தீர்த்தம் நாகச்சுனை. தலவிருட்சம் புன்னைமரம். இக்கோயிலில் 1944 ஆம் ஆண்டு அம்பாள் நிகழ்த்திய அற்புதம் இது.
அன்று ஆடித்தபசு. அவ்விழாவில் முதற்காட்சியான சங்கரநாராயணர் தரிசனம் முடிந்து, இரண்டாம் காட்சிக்கு அம்பாள் சப்பரம் மண்டகப்படியில் தயாராக இருந்த நேரம்.
அர்ச்சகர், சில காவலர்களைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. கோயில் அதிகாரி, கட்டளைதாரர், பக்தர்கள், அனைவரும் சங்கரலிங்க சுவாமியை இரண்டாம் காட்சிக்கு அழைப்பதற்காக கோயிலுக்கு வந்தனர்.
அந்த நேரம் பார்த்து தபசு மண்டகப்படியில் அர்ச்சகர், காவலாளி சிறிதுநேரம் கண் அயர்ந்தனர். அந்த நேரம் பார்த்து திருடன் ஒருவன் சப்பரத்தில் அம்பாளின் காதணியை திருடினான்.
உறங்கிக் கொண்டிருந்த அர்ச்சகரை சிறுமி ஒருத்தி எழுப்பி தாத்தா என் காதணியை ஒரு ஆள் திருடி விட்டான் எனச் சொல்லி அவன் சென்ற திசையை காட்டினாள். சுதாரித்துக் கொண்ட அர்ச்சகர் சப்பரத்தில் அம்பாளுக்கு சாற்றிய காதணியை பார்க்க அங்கு அது இல்லை. இருவரும் திருடனை சாமர்த்தியமாக பிடித்தனர். அதுவரை அவர்களோடு இருந்த சிறுமியை காணவில்லை. தேடிப்பார்த்த அங்கிருந்தோர் சிறுமி வடிவில் வந்தது கோமதியம்பாள் தான் என்பதை உணர்ந்தனர். விசாரணையில் அதிகாரிகளிடம், ''கோமதியின் கருணையை பலர் பலவிதமாக புகழ்கின்றனர். அதை தெரிந்து கொள்ளவே அவ்வாறு செய்தேன்'' என திருடன் கூறி மன்னிப்பு கேட்டான்.
தன்னுடைய நகையை மட்டும் அல்லாது விழாக்காலங்களில் பெண்கள் அணிந்து வரும் நகைகளையும் இன்றும் பாதுகாத்து வருகிறாள் கோமதியம்பாள் என்பது உண்மை.
கோமதி என்பது மந்திரச்சொல் என்பதை உணர்ந்தவர் அறிவர்.

