ADDED : ஜூலை 02, 2023 10:40 AM

இதுவே என் ஊர் இவரே என் பெற்றோர்
ஸந்த் ஜனாபாய் எழுதிய 'பக்ஷீ ஜாய' என்று தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.
'பறவை இரை தேட பல திசைகளிலும் பறந்து கொண்டிருக்கிறது. அப்போது வானத்தில் பருந்து வட்டமிடுவதைப் பார்த்தால் உடனே குஞ்சுகளைக் காப்பதற்காக அங்கு பறந்து செல்கிறது. என்னதான் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் தாயின் மனம் குழந்தையைப் பற்றியே நினைக்கிறது. குரங்கு மரத்திற்கு மரம் தாவினாலும் தன் வயிற்றைக் கட்டிக் கொண்டிருக்கும் குட்டிக்கு பாதகம் வராதபடி பார்த்துக் கொள்கிறது. என் விட்டலனும் அன்னையைப் போலத்தான். அவனை நான் அப்படித்தான் பார்க்கிறேன்'.
...
'நாம சங்கீர்த்தனம்னு சொன்னீங்களே, அது என்னப்பா?' கேட்டான் மயில்வாகனன்.
பத்மநாபனுக்கு ஆனந்தமாக இருந்தது. குடும்பத்தினர் கூடிப் பேசுவதே அரிதாகி வரும் இந்தக் காலத்தில் மனைவியும் குழந்தைகளும் அடிக்கடி பக்தி தொடர்பாக உரையாடுவது மகிழ்ச்சியை அளித்தது. விளக்கத் தொடங்கினார்.
'நாம சங்கீர்த்தனம் என்பது கடவுளின் பலவித பெயர்கள், அவரது பெருமைகள், சிறப்புகள் இதையெல்லாம் இசையுடன் சேர்த்து கூட்டாக வழிபாடு செய்வதுதான். மார்கழியில் பஜனை செய்து கொண்டு வருவதை பார்த்திருப்பாயே. அது கூட நாம சங்கீர்த்தனம்தான்'
' வழிகளில் முயற்சித்தால்தான் கடவுள் கருணை செய்வான் என்பதில்லை. நாம சங்கீர்த்தனம் செய்தாலே அவரை நெருங்கி விட முடியும் என்று சில ஞானிகள் கூறியிருக்கிறார்கள் இல்லையா?' என்று கேட்டாள் பத்மாசனி.
'உண்மைதான். பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது நல்லது. ஆதிசங்கரர் இயற்றிய பஜ கோவிந்தம் பாடலில் பகவத் கீதை போன்ற நுால்களை தினமும் கூறி வந்தால் திருமால், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். விட்டலனின் பக்தர்கள் அபங்கங்கங்களில் கடவுளின் திருநாமங்களை அடிக்கடி குறிப்பிடுவதை நீ கவனித்திருக்கலாம்' என்று கூறிய பத்மநாபன் ஜனாபாய் குறித்த நிகழ்வுகளைத் தொடர்ந்தார்.
...
ஊருக்குக் கிளம்பலாம் என தந்தை அவசரப்படுத்தியும் கூட சிறுமி ஜனாபாய் அங்கிருந்து அசையவில்லை. விட்டலனின் சன்னதியை நோக்கியபடி அடுத்த பாடலை பாடத் தொடங்கினாள்.
'பெற்றோர் சொல்வதைக் கேட்க மாட்டாயா?' என்று அதட்டினார் தந்தை.
'இதோ இருக்கிறார் என் அப்பா' என்றபடி விட்டலனை சுட்டிக்காட்டினாள் அந்த சிறுமி.
'விளையாடாதே ஜனா. நேரமாகிறது. ஊருக்குக் கிளம்ப வேண்டும்' என்றாள் தாய்.
'இதுதான் என் ஊர்' என்று கூறியபோது அந்த சிறுமியின் முகத்தில் அப்படி ஒரு உறுதி. அடுத்த பாடலைப் பாடத் தொடங்கினாள் சிறுமி ஜனா. சற்று தள்ளி நின்று கொண்டிருந்த வேறொரு பரம பக்தரின் காதுகளிலும் விழுந்தது. மெய்மறந்து அந்த பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த அவர் நாமதேவர்தான்.
பண்டரிபுரம்தான் என் ஊர் என்றும் விட்டலன்தான் தன் பெற்றோர் என்றும் சிறுமி பேசியதைக் கேட்டு நாமதேவர் மெய் சிலிர்த்தார். அந்த சிறுமியின் பெற்றோர் தவித்துக் கொண்டிருந்தனர். உடனே தங்கள் ஊருக்கு திரும்பியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.
நாமதேவர் அவர்களிடம் 'நீங்கள் கிளம்புங்கள். நான் இவளை பார்த்துக் கொள்கிறேன்' என்றார். பெற்றோர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. என்றாலும் ஊரார் அனைவரும் நாமதேவரின் பெருமைகளை விவரித்ததும் அதை ஏற்றுக் கொண்டு கிளம்பினர்.
நாமதேவரும் ஜனாபாயுமாக மாறி மாறி விட்டல கானங்களைப் பாட, மக்களுக்கு அங்கிருந்து வீட்டுக்கு திரும்ப மனம் இல்லாமல் போனது. இரவு கவிந்தது. சிறுமி ஜனாபாயை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் நாமதேவர்.
நாமதேவரின் மனைவியும் அந்தச் சிறுமி வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தாள். போகப்போக நாமதேவரின் அருமை பெருமைகளை ஜனாபாய் உணர்ந்து கொண்டாள். விட்டலன் அவரோடு நேரடியாகத் தோன்றி உறவாடுவான், விளையாடுவான் என்பதையெல்லாம் அறிந்ததும் ஜனாபாய்க்கு சிலிர்ப்பு ஏற்பட்டது. நாமதேவருக்கு சேவை செய்யத் தொடங்கினாள். அவள் மனதில் ஒரு ஏக்கம் படரத் தொடங்கியது. 'விட்டலன் எனக்கும் காட்சியளிப்பானா? என்னுடனும் நட்பாகப் பழகுவானா?'.
ஜனாபாய் தானும் அபங்கங்களை இயற்றிப் பாடினாள். நாமதேவர் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தன்னை 'நாமதேவரின் ஜனாபாய்' என்று குறிப்பிட்டுக் கொள்ளத் தொடங்கினாள்.
வருடங்கள் கடந்தன. ஜனாபாய்க்கு வீட்டில் தங்க இடம் கொடுத்தாலும், அவளுக்கு மேலும் அதிகப்பணிகளை சுமத்தத் தொடங்கினாள் நாமதேவரின் மனைவி. இதிலெல்லாம் மனம் சுணங்கவில்லை ஜனாபாய். விட்டலன் பெருமைகளைப் பாடும் பாடல்களை பாடியபடியே வேலை செய்யும் போது சிரமமாவது ஒன்றாவது!
நாமதேவரின் வீடு குடிசையால் ஆனது. அதன் சுவர்கள் களி மண்ணாலானவை. ஒருநாள் பண்டரிபுரத்தில் பெரும் மழை பொழிந்தது. காற்று சுழன்று வீசியது. நாமதேவர் வசித்த குடிசை வீட்டின் மேற்பரப்பு சுழன்று கீழே விழுந்தது. உடனே கரிசனம் பொங்க அங்கு வந்த விட்டலன் சுதர்சன சக்கரத்தை குடிசை வீட்டின் மீது நிலைநிறுத்தி காப்பாற்றினான். அப்போது அசதியுடன் நாமதேவர் உள்ளே சற்று களைப்பாறிக் கொண்டிருக்க அவர் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். ஜனாபாய் உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள்.
களைப்பாறிய நாமதேவர் வீட்டுக்கு வெளியேவர விட்டலன் அங்கே இருப்பதை கவனித்தார். சக்கரத்தை வீட்டுக்கு மேல் குடை போலப் பயன்படுத்தி இரவு முழுவதும் தன்னைக் காத்திருக்கிறான் என்பதை உணர்ந்து நெக்குருகினர். அது போதாது என மழையால் கரைந்த ஒரு பக்கச் சுவரில் இருந்த களிமண்ணை விட்டலன் சரிசெய்து கொண்டிருந்தான். அவனது பீதாம்பரத்தில் களிமண் சிறிது அப்பிக் கொண்டிருந்தது.
விட்டலா விட்டலா என நாமதேவர் நெகிழ்ச்சியில் கூக்குரலிட ஜனாபாய் வெளியே வந்தாள். அந்த காணக்கிடைக்காத காட்சியைக் கண்டாள். விட்டலின் புன்னகை பொங்க ஜனாபாயைப் பார்த்தாள். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வெளியானது. அதையடுத்து அவள் உள்ளத்தில் பதற்றம் கூடியது. 'விட்டலா, உன் உடையெல்லாம் அழுக்காகிவிட்டது. என்னிடம் கொடு. துவைத்துத் தருகிறேன்' என்றாள். ' என்னிடம் மாற்று உடை இல்லையே' என்றான் அந்த மாயவன்.
உள்ளே ஓடிச் சென்றாள் ஜனாபாய். தன்னிடம் இருந்த சுத்தமான கந்தல் உடை ஒன்றை விட்டலனுக்கு அளித்தாள். விட்டலனின் களிமண் படிந்த பீதாம்பர உடையை எடுத்துச் சென்று துவைத்தாள்.
'விட்டலா இன்று என் வீட்டிலேயே உணவருந்துவாயா?' என்று நாமதேவர் தயக்கத்துடன் கேட்டார். தயக்கத்துக்குக் காரணம் அந்த வீட்டில் அன்று எளிய உணவு தான் இருந்தது. விட்டலன் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதும் நாமதேவரை விட அதிகமாக ஆனந்தப்பட்டாள் ஜனாபாய். இன்று என்ன தனக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் கொட்டுகிறதே. தான் சமைத்த உணவை விட்டலன் உண்ணப் போகிறானா?
நாமதேவர், அவர் மனைவி, விட்டலன் ஆகிய மூவரும் சேர்ந்து சாப்பிட, ஜனாபாய் பக்தியும் பரவசமுமாக அவர்களுக்கு உணவு பரிமாறினாள். விட்டலன் ரசித்து உணவை சாப்பிடுவதைக் கண்டதும் அவள் மனம் நிறைந்தது. என்றாலும் கூடவே ஒரு சிறு குறையும் எட்டிப்பார்த்தது. 'தன்னையும் கூட சேர்ந்து உணவருந்துமாறு விட்டலன் ஒரு வார்த்தை கூறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்'.
-தொடரும்
ஜி.எஸ்.எஸ்.,
aruncharanya@gmail.com