/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
27 நட்சத்திரங்களுக்கும் தோஷம் நீங்க வழியிருக்கு
/
27 நட்சத்திரங்களுக்கும் தோஷம் நீங்க வழியிருக்கு
ADDED : நவ 05, 2010 03:58 PM
முருகப்பெருமானை வணங்குவோர் நாளும் கோளும் பற்றி கவலை கொள்ள @வண்டாம். கிரகங்களால் உண்டாகும் துன்பங்களில் இருந்து விடுபட எளிய அருமையான வழியும் இருக்கிறது. கந்தர் அலங்காரப் பாடல் ஒன்று இதற்கு சாட்சி.
இதோ அப்பாடல்...
''நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே''
இந்தப் பாடலுக்குள்ளேயே 27 நட்சத்திரங்களும் அடங்கி விடுகின்றன.
இந்தப்பாடலின் பொருளைக் கேளுங்கள்.
நாள் என் செய்யும் - அஷ்டமி, நவமி போன்ற நாள்கள் நம்மை என்ன செய்யும்?
வினை தான் என் செயும்- தீயவினைகள் போன்ற கர்மவினைகள் தான் நம்மை என்ன செய்யும்?
எனை நாடிவந்த கோள் என் செயும்- நவக்கிரகங்களும் நம்மை என்ன செய்யும்?
கொடுங் கூற்றென் செயும்- கொடிய எமன் தான் என்ன செய்ய முடியும்?
குமரேசர் - குமரக்கடவுளாகிய முருகபெருமானின்
இரு தாளும்- திருப்பாதங்களும்(2)
சிலம்பும்- பாதத்தில் அணிந்திருக்கும் சிலம்பணியும்(2)
சதங்கையும்- சலங்கைகள் இரண்டும்(2)
தண்டையும்- தண்டைகளும்(2)
சண்முகமும்- ஆறுமுகங்களும்(6)
தோளும்- பன்னிரண்டு தோள்களும்(12)
கடம்பும்- மார்பில் ஆடும் கடப்பமலர் மாலையும்(1) ஆக 27ம் எனக்கு முன்னே வந்து அருள்பாலிக்கும்போது, நான் ஏன் நாளையும் கோளையும் கண்டு பயப்பட வேண்டும் என்கிறார் இப்பாடல் ஆசிரியர் அருணகிரிநாதர். இந்தப் பாடலைப் பாடினால் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பற்றியெல்லாம் கவலையில்லை. வேலவன் பாதுகாப்பான். 27 நட்சத்திரத்தில் எதில் பிறந்திருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.