ADDED : ஜன 28, 2011 10:55 AM
அமிழ்தினும் இனிய தமிழுக்கு வாழ்த்துப்பாடல் பாடிய பெருமை மனோன்மணீயம் சுந்தரனாரைச் சேரும். தமிழ் உணர்வு கொண்ட அனைவரின் வணக்கத்திற்குரிய தமிழறிஞர் இவர் என்றால் மிகையில்லை.
கேரளா, ஆலப்புழையில் பிறந்தவர். தமிழில் இளங்கலைப்படிப்பை திருவனந்தபுரம் பேரரசர் கல்லூரியில் கற்றார். அங்கேயே தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1882ல் திருவனந்தபுரம் அரண்மனையில் ''பிறவனை சிராஸ்தார்'' என்ற பதவியை வகித்தார். 1891ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயர்கலைக்கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1896ல் சென்னை அரசால் சிறப்பிற்குரிய 'ராவ்பகதூர்' பட்டம் பெற்றார். இதே ஆண்டில் பிரிட்டிஷ் அரசு இவர் எழுதிய தென்னிந்திய வரலாற்று ஆய்வுக்காக 'ராய் பகதூர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது. 1891ல் 'மனோன்மணீயம்' என்ற நாடகத்தை எழுதினார். இந்த நாடகத்தின் பெயர், இவரது பெயரோடு அடைமொழியாகச் சேர்ந்துகொண்டது. லிட்டன் எழுதிய ''தி சீக்ரெட் வே'' (ரகசியவழி) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். இன்று பள்ளிகளிலும் விழாக்களிலும் துவக்கத்தில் பாடப்படும்'நீராடும் கடல் உடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்து இந்நூலில் தான் இடம்பெற்றுள்ளது. தமிழ் இலக்கியத்தில் காலஆராய்ச்சியைத் துவக்கி வைத்தவர் இவரே. தமிழ் இலக்கியப்பரப்பில் சில மைல் கற்கள் (திருஞானசம்பந்தரின் காலஆய்வு), சாத்திர சங்கிரகம் என்னும் நூலைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.