ADDED : பிப் 05, 2014 10:34 AM

கடவுளே நீ எனக்கு இதைச் செய்தால், நான் உனக்கு அதைச் செய்வேன்,'' என்று நேர்ந்து கொள்வது தான் உலக இயற்கை. ஆனால், நேர்த்திக்கடனே செய்யாத கோயில் ஒன்றும் தமிழக தலைநகரில் இருக்கிறது. திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தான் அது.
தல வரலாறு: சோழர் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை தம்பதியருக்கு சிவனருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று பெயரிடப்பட்டது. கடல் வாணிபம் செய்த இவர், 16ம் வயதில் சிவகலையை திருமணம்
செய்தார். குழந்தை இல்லை. சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார். இதனிடையே, சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு சிவனே மகனாகப் பிறந்தார். குழந்தைக்கு 'மருதவாணர்' என பெயரிட்டனர். சிவனுக்கு சேவை செய்து, வறுமையில் வாடிய இத்தம்பதியரால், குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. திருவெண்காடர், சிவசருமர் தம்பதிக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டார் சிவன். சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதேசமயம் திருவெண்காடரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார்.
மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்த அவர், ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனிடையே வெளியே சென்றிருந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் ''காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்ட காகிதமும், உமி வரட்டியும் இருந்தது.
திருவெண்காடருக்கு ஏதோ 'சுரீர்' என்று உரைத்தது.
''மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்பதை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், சிவனை வணங்கி முக்தி வழங்க வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் சிவத்தல யாத்திரை சென்றார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், 'பட்டினத்தார்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்ற மன்னனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன், பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பைக் கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் திருவொற்றியூர் வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. அங்கிருந்த சிலரை அழைத்த அவர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாகி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் பட்டினத்தாருக்கு கோயில் எழுப்பப்பட்டது.
உத்திராட பூஜை: வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. ராஜகோபுரம், விமானம் கிடையாது. பட்டினத்தார் கடலை பார்த்தபடி, லிங்க வடிவில், சதுரபீடத்துடன் காட்சி தருகிறார். அவர் பிறந்த நட்சத்திரம் உத்திராடம். எனவே, ஒவ்வொரு உத்திராடம் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. பட்டினத்தார், சிவனருள் வேண்டி குடும்பத்தைப் பிரிந்து துறவியாக வந்தவர். எனவே இவரிடம் வேண்டிக்கொள்பவர்கள் நேர்த்திக் கடனாக 'இந்த பொருளை செலுத்துகிறேன்' என்று பக்தர்கள் வேண்டுவதில்லை. கோரிக்கையை மட்டும் சொல்லி வணங்கிச் செல்கிறார்கள். நேர்த்திக்கடன் செலுத்துவதாக சொல்லி வேண்டினால், அந்த செயல் நிறைவேறாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
பட்டினத்தார் சந்நிதி முகப்பில் 27 நட்சத்திர தீபம் உள்ளது. இதில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். இவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை, பிரசாதமாக தருகிறார்கள்.
இருப்பிடம்: சென்னை எழும்பூரில் இருந்து 12 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 22 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 7.00- 12.00, மாலை 4.00 -இரவு 8.00.
போன்: 98402 84456.

