
ஏழுமலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள் (வாசல்), ஏழு அடி உயர பெருமாள். இப்படி, ஏழுமலைவாசனான பெருமாளுக்கு எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருப்பது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பெருமாள்கோயிலில். தமிழக திருப்பதி என அழைக்கப்படும் இங்கு வரதராஜப்பெருமாள், பெருந்தேவி தாயாருடன் அருளாட்சி செய்கிறார்.
தல வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றனர். அவர்கள் சூளகிரி மலைப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் பெருமாள் வழிபாடு செய்ய விரும்பினர். அர்ஜுனன் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். அவன் அமைத்த பெருமாளே 'வரதராஜப் பெருமாள்' என பெயர் பெற்றார். இந்த மலையில் 'ஐந்து குண்டு' என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. பாண்டவர்கள் ஒவ்வொருவரும் இந்த குன்றுகளில் தங்கியிருந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மலையைப்பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனால் இப்பகுதி 'சூலகிரி' யாக இருந்து, 'சூளகிரி' என மருவி விட்டது.
சிறப்பம்சம்: மேற்குபார்த்த இந்த பெருமாள்கோயிலில் உத்ராயண காலத்தில் (தை- ஆனி) சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் பட்டு அவரை வணங்குவதை காணலாம். இதனால் 'அஸ்தகிரி' எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது. சூளகிரி மலையின் உயரம் 3000 அடி. மலையின் ஆரம்பத்திலேயே வரதராஜப்பெருமாள் கோயில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.கோயிலின் கருவறை உயரம் மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் பெருமாளும் ஆரம்பகாலத்தில் கர்ப்பகிரக நிலைவாசலுக்கு உள் அடங்கி இருந்ததாகவும், காலப்போக்கில் வளர்ந்து மகாமண்டபத்தில் இருந்து பார்த்தால் பெருமாள் பாதி அளவே தெரியும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இவரைத் தரிசித்தால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பெருமாளை பார்த்தபடி பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அனுமன் பெருமாளின் காவலனாக மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். இக்கோயிலை பல மன்னர்கள் பல காலங்களில் கட்டியிருக்கிறார்கள். அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டினர். கிருஷ்ணதேவராயரால் முன் மண்டபம் கட்டப்பட்டது. கர்நாடகத்தை ஆண்ட ஹொய்சாலர்கள், பாளையக்காரர்கள், விஜய நகர சிற்றரசர்கள் படிப்படியாக இந்த கோயிலை விரிவுபடுத்தி வழிபட்டு வந்துள்ளனர்.
திருவிழா: மார்கழி மாதம் முழுவதும் இங்கு விழாக் கோலம் தான். சிறப்பு பூஜைகள் உண்டு. விழா காலங்களில் கருட சேவை உண்டு. இந்தப்பகுதியிலேயே இங்குள்ள கருட வாகனம் தான் மிகவும் பெரியது.
திறக்கும் நேரம்: காலை 5- பகல் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி.
இருப்பிடம்: ஓசூரில் இருந்து சென்னை நெடுஞ்சாலையில் 20 கி.மீ.,