
புதுடில்லி கேசவ் புரத்தில் உள்ளது ஐஸ்வர்ய மகாகணபதி கோயில். சங்கடஹர சதுர்த்தியன்று இவரை தரிசித்தால் ஐஸ்வர்யம் பெருகும். ஒவ்வொரு ஊரிலும் முதற்கடவுளான விநாயகருக்கு கோயில் இருப்பது அவசியம். அதன்படி பக்தர்களின் முயற்சியால் இக்கோயில் உருவாக்கப்பட்டது. கோயிலுக்குள் நுழைந்ததும் தியானம், பிரார்த்தனை செய்யும் முன் மண்டபம் உள்ளது. அதைக் கடந்து சென்றால் பிரதான சன்னதியில் விநாயகர் மூலவராக எழுந்தருள்கிறார்.
கைகளை குவித்து வணங்குவதை விட நெற்றியில் குட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் இட்டுக் கொண்டும் வழிபடுவதே விநாயகருக்கு பிடிக்கும். வலக்கையை இடது நெற்றிப் பொட்டிலும், இடக்கையை வலது நெற்றிப் பொட்டிலும் வைத்து மூன்று முறை குட்ட வேண்டும். பின் இதே முறையில் காதுகளை பிடித்து மூன்று முறை தோப்புக்கரணம் இட வேண்டும்.
விநாயகர் பாடல்கள், ஸ்லோகங்களை சொல்லியபடி சன்னதியை வலம் வர வேண்டும். இப்படி செய்பவருக்கு ஐஸ்வர்யங்களை வாரி வழங்குவார். நவக்கிரகம், அனுமன், துர்கை, ஐயப்பன், சிவபெருமானுக்கு சன்னதிகள் இங்கு உள்ளன. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தர்மசாஸ்தா திருக்கல்யாணம், மகரபூஜை, சப்தாகம் என்னும் பெயரில் ஏழு நாட்கள் தொடர்ந்து பகவத்கீதை, சுந்தரகாண்டம் பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் ஆண்டு தோறும் நடக்கிறது.
எப்படி செல்வது: கேசவ் புரம் மெட்ரோ நிலையத்தில் இருந்து 700 மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சாஸ்தா மண்டல பூஜை.
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 83687 07333, 011 - 2715 2951
அருகிலுள்ள கோயில்: சாலிமார் பாக் மீனாட்சி சுந்தரேஸ்வரர் 5 கி.மீ., (திருமணம் நடக்க...)
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 98101 82005, 98112 26105
டில்லி தியாகராஜன்