
பிரதோஷத்தன்று சிவன் கோயிலில் நந்தியை வழிபடுவது விசேஷம். இந்த நாளில் நந்தி அவதரித்த தலமான ஸ்ரீசைலத்திற்கு சென்றால் தொழிலில் இன்னும் லாபம் சேரும். ஜோதிர்லிங்க தலமான இது ஆந்திர மாநிலம் கர்னுால் மாவட்டத்தில் உள்ளது.
இங்கு வசித்த சிலாத மகரிஷிக்கு சிவபெருமானின் அருளால் நந்திகேசன், பர்வதன் என்ற மகன்கள் பிறந்தனர். ஒருமுறை நந்திகேசனை காண சில மகரிஷிகள் வந்தனர். அவர்களுக்கு இன்னும் சில காலத்திற்குள் நந்திகேசனின் ஆயுள் முடியப் போவதை உணர்ந்தனர்.
அதை அவர்கள் சொன்ன போது, ''சிவன் அருளால் பிறந்த நான் நீண்ட காலம் வாழ்வேன்'' என்று சொல்லி தவத்தில் ஈடுபட்டார் நந்திகேசன். அவரது தவத்தை ஏற்ற சிவன் தன் வாகனமாக ஏற்றுக் கொண்டார். அத்துடன் அவரது அனுமதியில்லாமல் யாரும் தன்னை தரிசிக்க முடியாது என வரம் கொடுத்தார். எனவே தான் கோயில்களில் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்னரே சிவனை தரிசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பர்வதனும் தவம் புரிந்து இங்கு பர்வத மலையாக இருக்கிறார்.
இங்குள்ள சிவனின் திருநாமம் மல்லிகார்ஜூனர். மல்லிகை, முல்லை மலர்களால் பூஜிக்கப்படுவதால் இப்பெயர் பெற்றார். இங்குள்ள அம்பிகை பிரமராம்பாள். இக்கோயிலில் மல்லம்மா என்னும் பெண் பக்தை ஆனந்தக் கண்ணீர் சிந்தும் சிலை காண்போரை பரவசப்படுத்தும். பஞ்ச பாண்டவர் மடம் இங்குள்ளது. நந்திதேவர் அவதரித்த தலம் என்பதால் அவரது சிலை பிரம்மாண்டமாக உள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்று.
பாண்டவர்களில் ஒருவரான பீமனின் பாதங்கள் பாறை ஒன்றின் மீது செதுக்கப்பட்டுள்ளது. உடல் வலிமை பெற பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். இங்கிருந்து நாகார்ஜூன சாகர் அணைக்குச் செல்ல படகு வசதி உள்ளது. திங்கள், வெள்ளியன்று தரிசிப்பது சிறப்பு.
எப்படி செல்வது: சென்னையில் இருந்து ஓங்கோல் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஸ்ரீசைலம் செல்லலாம். 470 கி.மீ.,
விசேஷ நாள்: தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி, பிரதோஷம்.
நேரம்: அதிகாலை 5:00 - 3:00 மணி; மாலை 5:30 - 10:00 மணி
தொடர்புக்கு: 83339 01351
அருகிலுள்ள கோயில் : மல்லம்மா 1 கி.மீ., (தைரியமாக வாழ...)
நேரம்: காலை 6:00 - இரவு 7:30 மணி
தொடர்புக்கு: 94905 00503