
நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவரோ, துன்பத்தில் உழன்றவரோ யாரும் கிடையாது. கடவுளின் தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்கும் என்கிறார் சுரக்காய் சித்தர். ஆந்திரப்பிரதேசம் புத்துாரில் நாராயணவனம் என்னும் இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது. இங்கு வருவோரின் நோய்களை தீர்க்கிறார் சித்தர்.
திருப்பதி அருகே பிறந்த இவரின் இயற்பெயர் ராமசாமி. ஆடு மேய்த்த இடத்தில் யோகி ஒருவரிடம் மந்திர உபதேசம் பெற்றார். அன்று முதல் 'நான் யார்' என்ற கேள்வியுடன் காடு, மலைகளில் சுற்ற ஆரம்பித்தார். பசிக்கும் போது மட்டும் நாராயணவன ஊருக்குள் வருவார். முதுகில் துணி மூட்டை, தலையில் தலைப்பாகை, நெற்றியில் நாமம், ஒரு கையில் தடி, மற்றொரு கையில் இரண்டு நாய்களைப் பிடித்திருக்கும் கயிற்றுடன் வலம் வருவார். இவரது கோலத்தை பார்த்தவர்கள் பிச்சைக்காரர் என நினைத்து தானியம், சாதம், கஞ்சியை கொடுத்தனர். அதை பெற்றுக்கொள்ள சுரக்காய் குடுவை வைத்திருப்பார்.
ஒருநாள் மூதாட்டி ஒருவர் சிறுமியுடன் அழுதபடி சென்றதை பார்த்தார். காரணம் கேட்டதற்கு 'தனது பேத்தி காய்ச்சலால் அவதிப்படுகிறாள். வைத்தியம் செய்தும் குணமாகவில்லை' என்றாள். உடனே அவர் அங்கு இருந்த சாம்பலை எடுத்து சிறுமிக்கு கொடுக்க காய்ச்சல் சரியானது. இவரது மகிமையை ஊரார் அறிந்தனர். அன்று முதல் தன்னை நாடி வருவோரின் பிரச்னைகளை தீர்க்க ஆரம்பித்தார். இவரை 'சுரைக்காய் தாத்தா' என அழைத்தனர். சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டு கற்சிலை நிறுவப்பட்டது. இவர் பயன்படுத்திய சுரைக்குடுவை, தடி, பாதக்குறடுகள் உள்ளன. கருவறைக்கு முன்பு ஓர் அக்னி குண்டம் எரிகிறது. காரணம் சித்தர் வாழும் போது விறகுகளை எரித்து அக்னிேஹாத்ரம் செய்வார்.
அதன் நினைவாக இன்றும் வேப்பமர விறகுகள் எரிக்கப்படுகின்றன. இதன் சாம்பலை பூசினால் நோய் குணமாகும். நோய் குணமானவர்கள் சன்னதியில் சுரக்காயை கட்டுகின்றனர்.
எப்படி செல்வது: திருத்தணியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.716) வழியாக 35 கி.மீ.,
விசேஷ நாள்: அமாவாசை, பஞ்சமி, பவுர்ணமி.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94909 40223
அருகிலுள்ள கோயில்: திருத்தணி முருகன் 36 கி.மீ.,(சுக்கிர தோஷம் தீர...)
நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 044 - 2788 5303