
பார்வை இல்லாவிட்டால் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். இதில் இருந்து நம்மைக் காக்கிறார் திருநெல்வேலி சீவலப்பேரி சுந்தரராஜப்பெருமாள் கோயில் கருடாழ்வார். இவருக்கு துளசி மாலை சாத்தி நெய் தீபம் ஏற்றுகின்றனர்.
பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் தாமிரபரணி கரையில் பெருமாள் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தார். இந்த இடத்தை சுற்றி வந்த மகாலட்சுமியும் பெருமாளுடன் ஐக்கியமானாள். அதனால் 'ஸ்ரீவலம் வந்த பேரி' என இத்தலம் அழைக்கப்பட்டது. 'ஸ்ரீ' என்றால் 'லட்சுமி'. நாளடைவில் இது சீவலப்பேரி என்றானது. பெருமாளுக்கு 'அழகர் சுந்தரராஜர்' என பெயர் சூட்டப்பட்டது.
தாமிரபரணி, சித்ராநதி, கோதண்ட ராமநதி ஆகிய மூன்றும் கலக்கும் இடம் சீவலப்பேரி. இப்பகுதிக்கு முக்கூடல், திரிவேணி சங்கமம் என பெயருண்டு. மதுரையிலுள்ள அழகர்கோவிலை 'வட திருமாலிருஞ்சோலை' என்றும், சீவலப்பேரியை 'தென் திருமாலிருஞ்சோலை' என்றும் சொல்வர். இந்த கோயில் இரண்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 12ம் நுாற்றாண்டில் மாறவர்ம வல்லப பாண்டியனால் விரிவுபடுத்தப்பட்டது.
சுடலைமாட சுவாமி, முண்டக சுவாமியும் காவல் தெய்வங்களாக உள்ளனர். பெருமாளின் தங்கையான விஷ்ணுதுர்கை கருவறையில் பெருமாளுடன் காட்சியளிக்கிறாள். சீவலமங்கை, அலர்மேல்மங்கை சன்னதிகள் உள்ளன.
சீவலப்பேரி அருகிலுள்ள மணப்படையை தலைநகராகக் கொண்டு மன்னர் சுந்தரராஜ பாண்டியன் ஆட்சி செய்தார். அவருக்கு பார்வைக் குறைபாடு இருந்தது. இந்த சமயத்தில் கருங்குளத்திற்கு செல்வதற்காக, கருட வாகனம் ஒன்றை சுமந்து வந்த பக்தர்கள் சீவலப்பேரியில் தங்கினர். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், 'என் வாகனமான கருடனை சீவலப்பேரி கோயிலில் வை' என ஆணையிட்டார். மன்னரும் அதை ஏற்க பார்வைக்குறைபாடு நீங்கியது.
அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் தாயைக் கொன்றதால் சக்கரத்தாழ்வாருக்கு தோஷம் உண்டானது. இதைப் போக்க சீவலப்பேரி முக்கூடல் ஆற்றில் நீராடினார். கள்ளழகர் கோலத்தில் காட்சியளித்த பெருமாள் அவருக்கு விமோசனம் அளித்தார். சக்கரத்தாழ்வார் நீராடிய இடம் சக்கர தீர்த்தம் எனப்படுகிறது. சித்ராபவுர்ணமியன்று கள்ளழகர் இங்கு ஆற்றில் இறங்குகிறார்.
திருப்பதி வெங்கடாசலபதி, அனுமன் சன்னதிகள் இங்கு உள்ளன. சனிக்கிழமை அன்று வெண்ணெய்க்காப்பு சாத்துகின்றனர். தமிழ் புத்தாண்டன்று தேர்த்திருவிழா நடத்துகின்றனர். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசையன்று ஆற்றில் நீராடி முன்னோரை வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது: திருநெல்வேலி - புளியம்பட்டி சாலையில் 18 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை விசு தேரோட்டம், கருடஜெயந்தி, புரட்டாசி சனி வாரம்.
நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 92831 48238
அருகிலுள்ள கோயில் : திருநெல்வேலி நெல்லையப்பர் 18 கி.மீ., (நலமுடன் வாழ...)
நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0462 - 233 9910