
தேனி மாவட்டம் கூடலுாரில் உள்ள கூடலழகிய பெருமாள் கோயில் ராமாயணக்கோயில் என அழைக்கப்படுகிறது.
இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் பெருமாள் பக்தராக இருந்தார். அவரது கனவில் குறிப்பிட்ட இடத்தைக் காட்டி கோயில் கட்டும்படி உத்தரவிட்டார் பெருமாள். அதன்படி கோயில் எழுப்பப்பட்டு சுவாமிக்கு 'கூடல் அழகிய பெருமாள்' என்றும், 'கூடலுார்' என்றும் ஊருக்கு பெயர் ஏற்பட்டது.
'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் அம்சமாக அமைக்கப்படுவது அஷ்டாங்க விமானம். இது திவ்யதேசங்களான மதுரை கூடலழகர், சிவகங்கை திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயில்களில் உள்ளது.
முன் மண்டபத்தில் ராமாயண நிகழ்ச்சிகள் சிற்பங்களாக உள்ளன. புத்திர காமேஷ்டி யாகம் நடத்தும் தசரதர், ராம சகோதரர்களின் பிறப்பு, சீதா கல்யாணம், ராவண வதம், பட்டாபிஷேகம் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். வெள்ளியன்று வாசனை திரவியம், நல்லெண்ணெய் சேர்த்த கலவையால் காப்பு சாத்துகின்றனர். மூலவர் கூடலழகர் என்றும், உற்ஸவர் சுந்தரராஜர் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிரிந்த தம்பதியர் சேர பெருமாளுக்கு துளசி மாலையும், பதவி உயர்வு கிடைக்க வஸ்திரமும் அணிவிக்கின்றனர். நவநீத கிருஷ்ணர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார். ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியன்று வீதியுலா புறப்பட்டு மறுநாள் கோயிலுக்கு திரும்புகிறார் பெருமாள்.
எப்படி செல்வது: தேனி - குமுளி சாலையில் 45 கி.மீ.,
விசேஷ நாள் : சித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 10:30 - 12:00 மணி; மாலை 5:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 04554 - 230 852
அருகிலுள்ள கோயில் : சுருளி பூதநாராயணர் 10 கி.மீ., (பிதுர்தோஷம் தீர...)
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 04554 - 276 715