
சிக்கல் தீர வழியில்லையே என கலங்கி நிற்பவரையும் கரை சேர்க்க காத்திருக்கிறார் சிவகோரி சிவன். இங்குள்ள சிவனை மனதார ஒருமுறை நினைத்தாலும் பலன் கிடைக்கும்.
காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் இமயமலையின் வனப்பகுதியில் இக்கோயில் உள்ளது. கத்ராவில் இருந்து மலையடிவாரம் வரை பஸ்சில் சென்று அங்கிருந்து 3 கி.மீ., துாரம் மலையேறினால் கோயிலை அடையலாம்.
காஷ்மீரி மொழியில் கோரி என்றால் 'குகை' என பொருள். மலைப்பாதையில் வழியெங்கும் ஓய்வு எடுக்கும் விதத்தில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பக்தர்கள் யாத்திரையாக நடந்தே செல்கின்றனர். இயலாதவர்களுக்கு டோலி அல்லது குதிரை சவாரி வசதி உள்ளது.
கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில் ஏப்ரல், அக்டோபரில் நடக்கும் வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி விசேஷமாக இருக்கும். அப்போது வரும் பக்தர்கள் வைஷ்ணவி தேவியோடு சிவகோரி சிவன் கோயிலையும் தரிசிப்பது வழக்கம்.
500 மீ., நீளம், 1 மீ., அகலம், 3 மீ., உயரம் கொண்டதாக குகை உள்ளது. உடுக்கையைப் போல நுழையும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும் சற்று அகலமானதாக குகை உள்ளது. பிரளய கால வெள்ளத்தில் உலகம் அழிந்த போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்குள்ள சிவனுக்குள் தங்களை ஐக்கியப்படுத்தியதாக தலவரலாறு கூறுகிறது. அமர்நாத் கோயிலுக்கும் பழமையான தலம் இது. கருவறையில் சுவாமி மூன்றடி உயரம் கொண்ட சிவலிங்கமாக காட்சியளிக்கிறார். செங்காவி நிற வஸ்திரம் சாத்தி சுவாமிக்கு பூமாலை, சந்தனம் சாத்தியுள்ளனர்.
காலை 7:00 - 8:00, இரவு 7:00 - 8:00 மணிக்கு அன்றாட ஆரத்தி நடக்கிறது. கருவறை மீது கூம்பு வடிவ கோபுரம் உள்ளது. பார்வதி, பஞ்சமுக கணேஷ், கார்த்திகேயன், ராமர், சீதை, ேஷக்நாக் சன்னதிகள் உள்ளன.
சிவலிங்கத்தின் மீது தாரா பாத்திரம் மூலம் தண்ணீர் விழுகிறது. அடர்ந்த காட்டின் நடுவே குகை இருந்தாலும் மகாசிவராத்திரியன்று விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் தரிசிக்கின்றனர். கூட்டத்தை தவிர்க்க விரும்புவோர் மாத சிவராத்திரியன்று விரதமிருந்து தரிசிக்கலாம். சுயம்புவான இந்த சிவனை காலை 6:00 - 8:00 மணிக்குள் தரிசிப்பது சிறப்பு.
எப்படி செல்வது: கத்ராவில் இருந்து 80 கி.மீ.,
விசேஷ நாள்: சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பசந்த பஞ்சமி.
நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணி
குளிர்காலத்தில்: காலை 6:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 94192 14613, 70060 23141
அருகிலுள்ள கோயில்: சத்ரா வைஷ்ணவி தேவி 80 கி.மீ., (நலமுடன் வாழ...)
நேரம்: நடை சாத்துவது கிடையாது.
தொடர்புக்கு: 01991 - 234 053