sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தமிழக அமாவாசை தலங்கள்

/

தமிழக அமாவாசை தலங்கள்

தமிழக அமாவாசை தலங்கள்

தமிழக அமாவாசை தலங்கள்


ADDED : பிப் 09, 2024 11:36 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாட்டுக்குரிய தலங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.

ராமேஸ்வரம்

ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த தலம் ராமேஸ்வரம். இங்கு ராமர் பிரதிஷ்டை செய்த சிவன் ராமலிங்கம் என்றும், அனுமன் பிரதிஷ்டை செய்த சிவன் விஸ்வ லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. காசி யாத்திரை செல்வோர் இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்தால் மட்டுமே யாத்திரை சென்ற பலன் உண்டாகும். கோயிலுக்கு எதிரிலுள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. கோயிலுக்குள் உள்ள கோடி தீர்த்தம் விசேஷமானது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் அமாவாசையன்று தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமியை வழிபடுவது நல்லது.

மதுரையில் இருந்து 200 கி.மீ.,

தொலைபேசி: 04573 - 221 223

ஆனைமலை மாசாணி

ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னர் நன்னனுக்குரிய மாமரம் ஒன்று இருந்தது. அதில் பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என மன்னர் உத்தரவிட்டிருந்தார். ஒருநாள் ஆழியாற்றில் நீராடிய இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்த மாம்பழத்தை எடுத்து உண்டாள்.

அவளுக்கு மன்னர் மரண தண்டனை விதித்து கொன்றார். அப்பெண்ணுக்கு சயன கோலத்தில் உருவம் அமைத்து மக்கள் வழிபடத் தொடங்கினர். அவளே உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் என்னும் பெயரில் 17 அடி நீளத்தில் தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி காட்சி தருகிறாள். நீதி தெய்வமான இவளை அமாவாசையன்று வழிபடுவது சிறப்பு.

பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,

தொலைபேசி: 04253 - 282 337, 283 173

கன்னியாகுமரி

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள் பார்வதியின் உதவியை நாடினர். ஒரு கன்னியால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என பிரம்மாவிடம் வரம் பெற்ற அசுரனை அழிப்பதற்காக, பார்வதியே குமரி வடிவில் தோன்றி தவம் செய்தாள். பலம் பெற்ற பார்வதி சக்ராயுதத்தை ஏவி அசுரனைக் கொன்றாள்.

இத்தலத்தில் அமாவாசையன்று நீராடி தர்ப்பணம் செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும்.

தொலைபேசி: 04652 - 246 223

அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்

திரிபுர அசுரர்களை அடக்குவதற்காக சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்னும் நியதியை அவர் பின்பற்றவில்லை. இதை அறிந்த விநாயகர் தேரின் அச்சை முறித்து சிவனைத் தடுத்தார். உண்மை உணர்ந்த சிவன், தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்க தேர் சரியானது. தேரின் அச்சு முறிந்த இடமான அச்சிறுபாக்கத்தில் கோயில் அமைக்கப்பட்டது. ஆட்சிபுரீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்ட இத்தல சிவனை அமாவாசையன்று வழிபட்டால் முயற்சி தடையின்றி நிறைவேறும்.

* காஞ்சிபுரத்தில் இருந்து 70 கி.மீ.,

* செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ.

அலைபேசி: 98423 09534

தொலைபேசி: 044 - 2752 3019.

பாபநாசம்

நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோயில். தாமிரபரணியின் கரையில் அமைந்த இங்கு அகத்தியருக்கு சிவபார்வதியின் திருமணக் கோலத்தை காணும் பேறு கிடைத்தது. பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக ரிஷபத்தின் மீதமர்ந்த அம்மையப்பரும், அருகில் மனைவி லோபமுத்திரையுடன் அகத்திய முனிவரும் காட்சி தருகின்றனர். தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஒருமுறை தாமிரபரணியில் நீராடி கங்கை நதி போக்குவதாக ஐதீகம். தமிழ்ப்புத்தாண்டு நாளில் இந்த வைபவம் நடக்கிறது.

மூலவர் ருத்திராட்சத்தால் ஆனது. அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.

திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,

தொலைபேசி: 04634 - 223 268

அனுமந்தபுரம் வீரபத்திரர்

தட்சன் நடத்திய யாகத்தை தடுப்பதற்காக வீரபத்திரரை அனுப்பினார் சிவன். ஆவேசம் கொண்ட வீரபத்திரர் வெட்டவே தட்சனின் தலை யாகத்தீயில் விழுந்தது. தட்சனின் தந்தையான பிரம்மாவின் ஆணையால், அங்கிருந்த ஆட்டின் தலை தட்சனுக்குப் பொருத்தப்பட்டது. அங்கிருந்து கோபமுடன் புறப்பட்ட வீரபத்திரரை பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி சாந்தம் அடைவாயாக என வழிகாட்டினார் சிவன். அதன்படி வீரபத்திரருக்கு இங்கு கோயில் கட்டப்பட்டது. அமாவாசையன்று இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,

தொலைபேசி: 044 - 2746 4325



திருச்செங்கோடு

கொடிமாடச் செங்குன்றம் என போற்றப்படும் தலம் திருச்செங்கோடு. இங்கு சிவன் அர்த்தநாரீஸ்வரராக பார்வதியை தன் உடம்பின் இடது பாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னதி சிறப்பு மிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோயிலான இங்குள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வம்பு, வழக்குகள் பேசித் தீர்க்கும் வழக்கம் இங்கிருந்தது. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமைமிக்கது. அமாவாசையன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு தீர்த்தம் பருகினால் உடல், மனநோய் நீங்கும். கருத்து வேறுபாடு நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,

தொலைபேசி: 04288 - 255 925

அய்யாவாடி

அமாவாசை வழிபாட்டுத் தலமான அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். ராவணனுடன் நடக்கவிருக்கும் போரில் வெற்றி பெற வேண்டி ராமர் யாகம் செய்து இங்கு வழிபட்டார்.

சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறமும், சிங்க முகமும், 18 கைகளும், சிரித்த முகமும் கொண்டு அருள்கிறாள். அமாவாசையன்று காலை முதல் மதியம் வரை நிகும்பல யாகம் என்னும் மிளகாய் வத்தல் யாகம் நடக்கும். இதில் மிளகாயின் நெடி இருப்பதில்லை. அமாவாசையன்று இங்கு வருவோருக்கு எதிரி தொல்லை நீங்கும்.

கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ.,

தொலைபேசி: 0435 - 246 3414






      Dinamalar
      Follow us