ADDED : பிப் 09, 2024 11:11 AM

பெங்களூரு அருகிலுள்ள பேகூர் நாகேஸ்வரர் கோயிலில் பஞ்சலிங்கேஸ்வரர் என்னும்
பெயரில் சிவபெருமான் ஐந்து சன்னதிகளில் அருள்புரிகிறார். இவர்களில் நாகேஸ்வரர் சன்னதியின் முகப்பில் சூரியன், சந்திரன் ஒரே இடத்தில் உள்ளனர். இங்கு வழிபடுவோர் அனைவருக்கும் அமாவாசையன்று சிவதரிசனம் செய்த புண்ணியம் சேரும்.
போதாயன மகரிஷி இங்கு பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்களை வழிபட்டால் உடல்நலம், தொழில் வளர்ச்சி. திருமணம், குழந்தைப்பேறு, சவுபாக்கியம் என அனைத்தும் கிடைக்கும். இங்கு கிழக்கு நோக்கி மூன்று சன்னதிகளும், மேற்கு நோக்கி இரண்டு சன்னதிகளும் உள்ளன. சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என ஐந்து முகம் கொண்டவர் சிவன் என்பதால் ஐந்து சன்னதிகள் உள்ளன. இவர்களில்
நகரேஸ்வரர் - தொழில் வளர்ச்சி காளிகமடேஸ்வரர் - குழந்தைப்பேறு
சோழேஸ்வரர் - திருமணம்
கருணேஸ்வரர் - ஆரோக்கியம்
நாகேஸ்வரர் - சவுபாக்கியம் அருள்கின்றனர்.
தெற்கு நோக்கிய சன்னதியில் பார்வதி இருக்கிறாள். நந்தியின் அருகில் நின்று நாகேஸ்வரர், அம்மன் சன்னதியை ஒரே நேரத்தில் தரிசித்தால் ஆத்மபலம், மனபலம் உண்டாகும்.
சிவதரிசனம் செய்பவர்கள் பணிவாக வாழ வேண்டும் என உணர்த்தும் விதமாக சன்னதியின் வாசல் குனிந்து செல்லும்படி சிறியதாக உள்ளது. தல விருட்சமாக வில்வம், வேப்ப மரம் உள்ளன. பிரகாரத்தில் 8ம் நுற்றாண்டைச் சேர்ந்த தமிழ், கிரந்த கல்வெட்டுகள் உள்ளன. சூரிய தீர்த்தம் என்னும் ஏரி அருகில் உள்ளது. காரண ஆகம முறைப்படி பூஜை நடக்கிறது.
சூரியன் சிவபூஜை செய்ததால் 'பாஸ்கர ஷேத்திரம்' எனப்படுகிறது.
13ம் நுாற்றாண்டில் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்துள்ளார். சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, பிரகாரம் என மூன்று இடங்களில் சூரிய சன்னதிகள் உள்ளன.
சித்திரை திருவிழாவின் போது நாகேஸ்வரர், இப்பகுதியைச் சுற்றியுள்ள கோயில்களின் உற்ஸவர்களுடன் பூப்பல்லக்கில் பவனி வருகிறார். அப்போது ஒரே நேரத்தில் 40 கோயில்களின் பூப்பல்லக்குகளை தரிசிக்கலாம்.
எப்படி செல்வது
* ஓசூர் - பொம்மனஹள்ளி சாலையில் 33 கி.மீ., அங்கிருந்து பேகூர் 5 கி.மீ.,
* பெங்களூரு - பொம்மனஹள்ளி செல்லும் வழியில் 14 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை பிரம்மோற்ஸவம், கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி.
நேரம்: காலை 7:30 - 11:30 மணி; மாலை 5:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 99723 94381, 99725 16358
அருகிலுள்ள தலம்: சப்தமாத்ருகா சவுடேஸ்வரி கோயில் (1 கி.மீ.,) (எதிரி பயம் அகல)
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 6:00 - 9:00 மணி