
டில்லி ஷாலிமார் பாக்கில் உள்ளது வந்தாரை வாழ வைக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு வந்தால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பாண்டிய மன்னர் மலையத்துவஜன், காஞ்சனமாலை தம்பதிக்குக் குழந்தை இல்லை. குறையைப் போக்க புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினர். அதில் பார்வதியே குழந்தையாக மூன்று மார்பகத்துடன் பிறந்தாள். 'தடாதகை' என பெயரிட்டு வளர்த்தனர். நாட்டின் இளவரசியாக பட்டாபிஷேகம் நடத்தினர். திக்கு விஜயம் புறப்பட்ட அவள், எண்திசை காவலர்களை வென்று கைலாயத்தை அடைந்தாள். நந்திகேஸ்வரரைத் தோற்கடித்து சிவனுடன் மோத தயாரானாள். ஆனால் அவரைக் கண்டதும் நாணத்தால் முகம் சிவக்க, மூன்றாவது மார்பகம் மறைந்தது. 'இவரே உன் மணாளன்' என அசரீரி ஒலித்தது. அதன்படி சிவபார்வதி திருமணம் நடந்தது.
அன்று முதல் தெய்வத்தம்பதியரின் ஆட்சி மதுரையில் தொடங்கியது. மீன் போல துாங்காமல் ஆள்பவள் என்பதால் தடாதகைக்கு 'மீனாட்சி' என்றும், சொக்க வைக்கும் அழகன் என்பதால் சிவனுக்கு 'சொக்கநாதர்' (சுந்தரேஸ்வரர்) என்றும் பெயர் வந்தது. சக்தி கணபதி, சுப்பிரமணியர், துர்கை, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் இங்கு உள்ளன. மனைவியருடன் நவக்கிரகங்கள் உள்ளனர். மீனாட்சி திருக்கல்யாணம், நவராத்திரியின் போது கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கடந்த கும்பாபிஷேகத்தின் போது 108 தம்பதி பூஜை, சுமங்கலி, வடு பூஜைகள் நடந்தன. ஒருமுறை லட்சதீபத்தின் போது பெண் குரங்கு (மந்தி) பங்கேற்றது. மீனாட்சி கலாசார மையம் சார்பில் கர்நாடக இசை வகுப்பும், வேதங்களை பரப்புவதற்காக 'வேதிக் சமாஜம்' என்னும் அமைப்பும் உள்ளன.
எப்படி செல்வது: டில்லி ஷாலிமார் பாக் மெட்ரோ நிலையத்தில் இருந்து 2 கி.மீ.,
விசேஷ நாள்: மீனாட்சி திருக்கல்யாணம், விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி.
நேரம்: காலை 7:00 -- 11:00 மணி; மாலை 5:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 98101 82005, 98112 26105
அருகிலுள்ள தலம்: லாரன்ஸ் ரோடு ஐஸ்வர்ய மகாகணபதி கோயில் 5 கி.மீ., (தடை விலக...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 93508 99916