ADDED : அக் 29, 2012 11:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐப்பசி பவுர்ணமியில் (அக்.29) சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகமும், அம்பாளுக்கு சாகம்பரி அலங்காரமும் செய்யப்படும்.
தல வரலாறு:
அத்திரி மகரிஷி இங்கு ஸ்தாபித்த லிங்கத்தைச் சுற்றி புற்று வளர்ந்து மூடிவிட்டது. பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், இங்கு லிங்கம் இருந்ததைச் சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். அவர் கோட்டையுடன் கோயில் எழுப்பினார். சுவாமிக்கு, 'ஜலகண்டேஸ்வரர்' என பெயர் சூட்டினார். பக்தர்களின் உடல், மனதில் ஏற்படும் பிணிகளை நீக்குபவராக அருளுகிறார். எனவே இவருக்கு, 'ஜுரகண்டேஸ்வரர்' என்றும் பெயருண்டு. பக்தர்கள் இத்தலத்தை, 'அப்பு' (நீர்) தலமாகக் கருதி வழிபடுகிறார்கள். பல ஆண்டுகளாக வழிபாட்டில் இல்லாத லிங்கம், 1981, மார்ச் 16ல் வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மூன்று தேவியர்:
ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பிகை சந்நிதிக்கு மேலே, ருத்ராட்ச பந்தல் வேயப்பட்டுள்ளது. வெளி மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமி உள்ளனர். சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்வது விசேஷம். காலசம்ஹார மூர்த்தி உற்சவராகக் காட்சி தருகிறார். ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க இவரது சந்நிதியில் ஆயுஷ்ய ஹோமம் செய்கின்றனர். இங்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பெருமாள் சந்நிதியும் உள்ளது.
காசிக்கு சமம்:
கோயில் பிரகாரத்தில் கங்கை நதி, கிணறு வடிவில் இருக்கிறது. இதற்கு அருகில் சிவன், 'கங்கா பாலாறு ஈஸ்வரர்' என்ற பெயரில் காட்சி தருகிறார். இவர் கிணற்றில் கிடைக்கப்பெற்ற மூர்த்தியாவார். கங்கை நதி இங்கு பொங்கியதாகச் சொல்கிறார்கள். இந்த லிங்கம், கூம்பு வடிவில் உள்ளது.
கோட்டை:
500 அடி நீளம், ஆயிரத்து 500 அடி அகலத்துடன் பிரமாண்டமான கோட்டை கோயிலைச் சுற்றி உள்ளது. சுற்றிலும் 25 அடி ஆழத்திற்கு பெரிய அகழி இருக்கிறது.
திருவிழா:
ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம், அம்பிகைக்கு காய்கறி, பழங்களால் அலங்கரிக்கும் 'சாகம்பரி' உற்சவம் நடக்கிறது. இவ்வேளையில் சிவன், அம்பிகையை தரிசித்தால் அன்னத்திற்கும், விளைபொருட்களுக் கும் குறையில்லாத நிலை ஏற்படும் என்கின்றனர்.
இருப்பிடம்:
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்.
திறக்கும் நேரம்:
காலை 6.30- பகல் 1, மாலை 4- இரவு 8.30.
போன்:
0416- 222 3412.