ADDED : அக் 29, 2012 11:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவலிங்கத்தில் பார்வதி தேவி ஐக்கியமாகி இருக்கும் சிவலிங்கம் கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள பெருவனத்தில் உள்ளது. 24 படிகள் ஏறியே இவரைத் தரிசிக்க முடியும். இதை 'இரட்டையப்பன் கோயில்' (மகாதேவர் கோயில்) என்கிறார்கள்.
தல வரலாறு:
வனமாக இருந்த இப்பகுதியில், பூரு மகரிஷி சிவனை நோக்கி தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த சிவன், அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து லிங்கம் ஒன்றைக் கொடுத்தார். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய, பூரு மகரிஷி, தனது விரல்களால் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். அது 'தொடுகுளம்' எனப்பட்டது. (இந்த குளத்தில் நீர்வற்றும் போது மகரிஷி போட்ட மூன்று கோடுகளை இப்போதும் காணலாம்) ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து எடுத்த போது லிங்கம் எடுக்க வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி லிங்கத்தை பூஜித்தார். இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும். பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் 'பூரு வனம்' என அழைக்கப்பட்டு, 'பெருவனம்' ஆனது.
தல சிறப்பு:
பூரு மகரிஷி பிரதிஷ்டை செய்த லிங்கம் 'மகாதேவர்' என்ற திருநாமத்துடன் அமைந்துள்ளது. அருகிலுள்ள சந்நிதியில் மகரிஷிக்கு காட்சி தந்த அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் உள்ளது. லிங்கத்திற்குள் பார்வதி இருப்பது இங்கு மட்டும்தான். பார்வதி வடிவை சிறுலிங்கத்திற்குள் இருப்பது போல செதுக்கி, பெரிய லிங்கத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
பூரம் திருவிழா:
இத்தலத்தில் 1426 வருடங்களாக பூரம் திருவிழா நடந்து வருகிறது. புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கூட 200 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது. இக்கோயிலை சுற்றியுள்ள 24 கோயில்களிலும் திருவிழா துவங்கும் முன், அந்தந்த கோயில்களின் நிர்வாகிகள், பெருவனம் கோயிலுக்கு வந்து சிவனிடம் அனுமதி கேட்டு பூஜை செய்த பின்னரே விழாவை துவங்குகின்றனர்.
வழிபாடு:
பிரிந்துள்ள தம்பதியினர் ஒன்று சேரவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடையவும், திருமணத்தடை விலகவும், ஆயுள் விருத்திக்கும் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொழில், வியாபாரம், புதிய திட்டங்கள் துவங்குதல், பணி ஆகியவற்றின் வெற்றிக்காவும், படிப்பில் சிறந்து விளங்கவும் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 60, 70, 80 வயது நிறைவடைந்த தம்பதியினர் இத்தலத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்கிறார்கள்.
கோயில் அமைப்பு:
ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் 'இரட்டையப்பன் கோயில்' என்கிறார்கள். இரண்டு லிங்கங்களின் எதிரிலும் நந்தி, பலிபீடம் உள்ளது. கோயிலின் பின்புறம் தொடுகுளம் உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிக்கு பின்புறம் கிழக்கு நோக்கி பார்வதி அருள்பாலிக்கிறாள். தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும், அருகே கணபதியும் உள்ளனர். சுற்றுப்பகுதியில் கோசால கிருஷ்ணன் அருளுகிறார். கோயிலின் வடக்கே அகமலா சாஸ்தா, தெற்கே வழுத்துகாவு சாஸ்தா, கிழக்கே குதிரான்மலா சாஸ்தா, மேற்கே எடத்திருத்தி சாஸ்தா என நான்கு திசைகளிலும் நான்கு சாஸ்தாக்கள் காவல் செய்கின்றனர்.
திருவிழா:
மாசி உத்திர நட்சத்திரத்தில் கொடியேற்றி பங்குனி உத்திர நட்சத்திரம் வரை பிரம்மோற்ஸவம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை.
திறக்கும் நேரம்:
காலை 5 - 10.30 , மாலை 5 - 8.
இருப்பிடம்:
திருச்சூரிலிருந்து திருப்பறையார் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் பெருவனம்.
போன்:
0487 - 234 8109.