ADDED : ஜூலை 14, 2016 11:09 AM

ஆடிமாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்படும். இதுபற்றிய தொகுப்பு... இதோ!
திருவிளக்கு பூஜை நடத்துவது ஏன்?
தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் “தீபமங்கள ஜோதீ நமோ நம” என்று திருப்புகழில் பாடுகிறார். வேதாரண்யம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது.
அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். இதனால் தான் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்துகின்றனர். இதில் பங்கேற்பவர்களும் பார்ப்பவர்களும் நிறைந்த செல்வத்தை அடைவர்.
எண்ணெய் பலன்கள்!
விளக்கில் இடும் எண்ணெய்க்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உண்டு. தீபத்தில் நெய் ஊற்றினால் லட்சுமி கடாட்சமும், செல்வவிருத்தியும் பெறலாம். கிரகதோஷம், பீடை நீங்கி நலம் பெற நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். விளக்கெண்ணெய் ஊற்றினால் புகழ் மிக்க வாழ்வு, கணவன், மனைவி ஒற்றுமை உண்டாகும். இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் துன்பம் நீங்கும். விவசாயம் செழிக்கும். தன,தானியம் பெருகும். தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுபவருக்கு விநாயகரின் அருள் கிடைக்கும். சர்ப்பதோஷம், திருமணத்தடை நீங்க புங்க எண்ணெய் ஏற்றது.
திரிகளின் பலன்!
பஞ்சு திரியில் விளக்கேற்றினால் லட்சுமியின் அருளைப் பெறலாம். முன்வினைப்பாவம் நீங்க தாமரைத்தண்டுத்திரி பயன்படுத்த வேண்டும். வாழைத்தண்டு நார் திரியிட்டு வழிபட குழந்தைச் செல்வம் உண்டாவதுடன், தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். வெள்ளை எருக்கிலை பட்டையைத் திரியாக்கி தீபமேற்றினால் சொத்து சுகம் கிடைக்கும். புதிய மஞ்சள் துணியை திரியாக்கி விளக்கேற்றினால் ஆரோக்கியமும், அம்பிகையின் அருளும் கிடைக்கும். குடும்ப பிரச்னை தீரும்.
தெய்வங்களுக்கு உகந்த எண்ணெய்!
அம்பாள் - தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், வேப்பெண்ணெய் சேர்ந்த கலவை.
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
லட்சுமி - நெய்
குலதெய்வம் - நெய், இலுப்பை, வேப்ப எண்ணெய் கலவை.
பைரவர் - இலுப்பை எண்ணெய்
முருகன், பெருமாள், மற்ற தெய்வங்கள் - நல்லெண்ணெய்.
எத்தனை பொட்டு வைப்பது!
திருவிளக்கு ஏற்றும் முன் விளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனம், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். அவ்வாறு பொட்டு இடும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் பெயரைச் சொல்லி மனதில் தியானிக்க வேண்டும்.
இதனால் ஐஸ்வர்யம் பெருகும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய ஏழும், ஆத்மா என்னும் உயிருக்கு (அதாவது நமக்கு) பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்று வேண்டி இந்த பொட்டுகள் இடப்படுகின்றன.
ஐந்து முகம் ஐந்து பலன்!
விளக்கில் ஒருமுகம் முதல் ஐந்துமுகம் வரை உண்டு. ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு பலன் உண்டு. ஒருமுகம் ஏற்றி வழிபட சுமாரான பலன் கிடைக்கும். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும். மூன்று முகம் ஏற்றினால் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். நான்கு முகம் ஏற்றினால் பூமி, பசு, கால்நடைகள் வகையில் பெரும் லாபம் கிடைக்கும். ஐந்துமுகம் ஏற்றினால் செல்வவளம் பெருகும்.

