/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
செவ்வாய் தோஷம் போக்கும் சேத்தூர்
/
செவ்வாய் தோஷம் போக்கும் சேத்தூர்
ADDED : செப் 04, 2020 05:11 PM

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு, அதே தோஷமுள்ள ஜாதகத்தை தேடிப்பிடித்து சேர்ப்பதற்குள் போதுமென்றாகி விடும். இதற்கு பரிகாரமாக ராஜபாளையம் அருகிலுள்ள சேத்துார் கண்ணீஸ்வரர் கோயில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
மன்னர்களான வீரபாகு பாண்டியனுக்கும், விக்கிரம சோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டியன் மீது பலமுறை போர் தொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. எனவே பாண்டியனைக் கொல்ல பலமுறை சதி செய்தான். தொடர்ந்து சதி செய்ததால் ஏற்பட்ட பாவத்தால், விக்கிரம சோழனுக்கு பார்வை போனது. தவறை உணர்ந்து மீண்டும் பார்வை கிடைக்க தேவதானம் என்ற ஊரிலுள்ள சிவபெருமானை வழிபட்டான். அங்கு ஒரு கண்ணில் பார்வை ஏற்பட்டது. மற்றொரு கண்ணுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என சோழன் வேண்டினான். அவனது கனவில் சிவபெருமான் தோன்றி, “தனக்கு கோயில் கட்டினால் பார்வை கிடைக்கும்'' என்று சொல்லி மறைந்தார். அதன்படி சேத்துாரில் கோயில் கட்டி பார்வை கிடைக்கப் பெற்றான். கண்ணொளி கொடுத்த சிவபெருமானுக்கு 'திருக்கண்ணீஸ்வரர்' என பெயர் ஏற்பட்டது. கண்நோய் உள்ளவர்கள், பார்வை பிரச்னை உள்ளவர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்
செவ்வாய் தோஷத்தால் திருமணத்தில் தாமதம் ஏற்பட்டால் இங்குள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராக வந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.
பூர்ணகலா, புஷ்கலாவுடன் அய்யனார் தெற்கு நோக்கி இருக்கிறார். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இந்த சன்னதியில் இருமுடி கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அனுமன் தெற்கு நோக்கி புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். வியாபாரம் செழிக்கவும், குடும்ப பிரச்னை தீரவும் சனிக்கிழமைகளில் இவருக்கு பூஜை நடத்துகின்றனர்.
எப்படி செல்வது: ராஜபாளையம் -- செங்கோட்டை ரோட்டில் 10 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையில் நடராஜருக்கு அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரத்தில் சுவாமி, அம்பாள் தபசு காட்சி.
நேரம்: காலை 6:15 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 96003 48204
அருகிலுள்ள தலம்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் 25 கி.மீ.,