/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தீபம் ஏற்றினால் தினமும் தீபாவளி!
/
தீபம் ஏற்றினால் தினமும் தீபாவளி!
ADDED : அக் 13, 2017 11:34 AM

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நின்றநாராயணப்பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். மகாலட்சுமி தவம் செய்த இங்கு தீபமேற்றி வழிபட தினந்தோறும் தீபாவளியாக தித்திக்கும்.
தல வரலாறு: திருமால் பாற்கடலில் சயனித்திருந்த போது ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள், 'மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். அதிர்ஷ்ட தேவதையான இவள் மகாலட்சுமி(ஸ்ரீ)என அழைக்கப்படுபவள். இந்திரன் இவளால் தான்பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன.
பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி என்ற திருநாமங்கள் உண்டு'என புகழ்ந்தனர்.
பூமாதேவியின் தோழியரோ,'உலகிற்கு ஆதாரமான பூமாதேவியே பொறுமை மிக்கவள். இவளைக் காக்கவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார்'என்றனர்.
நீளாதேவியின் தோழிகள்,'தண்ணீர் தேவதையாக விளங்குபவள் நீளாதேவி. தண்ணீரை 'நாரம்' என்பர். இதனால் தான் பெருமாளுக்கு 'நாராயணன்' என்ற சிறப்பு திருநாமம் ஏற்பட்டது' என்றனர். விவாதம் முடிந்த பாடில்லை. இதனால் ஸ்ரீதேவி, வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள்
என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலில் தவம் புரிந்தாள்.
பெருமாளும் காட்சி அளித்து ஸ்ரீதேவியே சிறந்தவள் என அருள் புரிந்தார். திருமகள் தங்கியதால் இத்தலம் 'திருத்தங்கல்' எனப்பட்டது.
அதிர்ஷ்ட தேவதை: கோயில் 'தங்காலமலை' மீது உள்ளது. மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சுதையாலான இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற பெயர்களுண்டு.
செங்கமலத்தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள். அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என பெயர்கள் உண்டு. தாயார் நின்ற கோலத்தில் உயரமாக காட்சி தருகிறார். தாயாருக்கு தினமும் திருமஞ்சனம், பெருமாளுக்கு விசேஷ நாளில் தைலக்காப்பும் நடக்கிறது. அனுமன், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதிகள் உள்ளன. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் கருவறையில் உள்ளனர். 1300 ஆண்டு பழமையான இங்கு வைகானச ஆகமப்படி பூஜை நடக்கிறது. இங்கு பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி தீர்த்தங்கள் உள்ளன.
மரமே மலையானது: சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்தது. இதற்கு தீர்வு காண இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா, ''ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்,''என கூறினார்.
வருத்தமடைந்த ஆலமரம் பெருமாளை நோக்கி தவமிருந்தது.மகிழ்ந்த பெருமாள், “உனது விருப்பம் என்ன?'' என கேட்டார். “தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளி கொண்டருள வேண்டும்,” என்றது ஆலமரம்.
அதற்கு பெருமாள், “திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக. நான் திருமகளை திருமணம் செய்ய வரும் காலத்தில், உன் மீது நின்றும், பள்ளிகொண்டும் அருள்பாலிப்பேன்,” என்றார். மலை வடிவில் இங்கு தங்கியதால்'தங்கும் ஆல மலை' எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை ஆனது.
எதிரியும் நண்பனே!
கருடாழ்வார் இங்கு நான்கு கைகளுடன் உள்ளார்.
முன் கைகள் வணங்கிய நிலையிலும், பின் கைகளில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இங்கு மட்டுமே. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால் பிரச்னை தீரும்.
விரைவில் திருமணம்: பெருமாளுடன் நான்கு தாயார்கள் உள்ளனர். அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி (பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி),
ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இங்கு தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டார்.பெருமாளையும், தாயார்களையும் வேண்டிக் கொள்ள திருமணத் தடை நீங்கும். தடை உள்ளவர்கள், பெருமாளுக்கு பரிவட்டம் சாத்தி, தாயாருக்கு திருமஞ்சனம் செய்து புளியோதரை படைத்து
வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது: விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கி.மீ.,
விசேஷ நாட்கள்: தீபாவளி, பொங்கல், வைகுண்டஏகாதசி
நேரம்: காலை 7:00- - 12:00, மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 94426 65443, 94435 70765
அருகிலுள்ள தலம்: 23 கி.மீ.,ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்