sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நல்லவனே! நீ இன்னும் நல்லவனாகு!

/

நல்லவனே! நீ இன்னும் நல்லவனாகு!

நல்லவனே! நீ இன்னும் நல்லவனாகு!

நல்லவனே! நீ இன்னும் நல்லவனாகு!


ADDED : ஜன 15, 2013 10:48 AM

Google News

ADDED : ஜன 15, 2013 10:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன., 12 விவேகானந்தர் பிறந்த நாள்

* உலகம் முழுவதும் நம்முடைய அனுபவத்திற்குரியதாகும். அதனால், ஒன்றையும் வேண்டி நிற்காதீர்கள். வேண்டுதல் என்பது நம்முடைய பலவீனமாகும். எதிர்பார்ப்பு வைக்கும்போது நீங்கள் பிச்சைக்காரர்களாகி விடுவீர்கள். உண்மையில் நீங்கள் அனைவரும் ராஜாவீட்டுப் பிள்ளைகள்.

* யாரையும் அடித்து விடுவது எளிய செயல். ஆனால், எழும்கையைத் தாழ்த்தி அமைதி காப்பதோ மிக கடினம்.

* பலவந்தமாகச் செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகளால் பலன் கிடைப்பதில்லை. 'நீ தீயவன்' என்று ஒருவனைச் சொல்லித் திருத்த முயற்சிப்பதை விட, 'நீ நல்லவன் தான்! ஆனால், இன்னும் நல்லவனாக ஆகவேண்டும்!' என்று சொல்வது நல்லது.

* அன்பு ஒருபோதும் குறை கூறுவதில்லை. பேராசை உணர்வால் தான் ஒருவரைக் குறை சொல்லத் துணிகிறோம்.

* உள்ளங்களை எப்போதும் திறந்து வையுங்கள். பிரபஞ்சத்தில் உள்ள நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களை வந்தடையட்டும்.

* ஒரு உயிர் பெரியது என்றும், இன்னொன்று சிறியது என்றும் எப்படிக் கூற முடியும்? எறும்புக்கும், தேவதூதனுக்கும் இடையே கூட அணுவளவும் வேற்றுமை பாராட்ட இடமில்லை.

* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு. எல்லா மனிதர்களிடமும் நட்பு பாராட்டு. எல்லாப் பூக்களிலும் தேன் நிறைந்திருக்கிறது. எல்லாரிடமும் 'நல்லது சகோதரரே நல்லது' என்று சொல். ஆனால், உனது சொந்த நெறியை உறுதியாகப் பற்றிக் கொண்டிரு.

* இந்த உலகம் பெரிய உடற்பயிற்சி சாலை. நம்மை வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்வதற்காகவே நாம் இங்கு வந்திருக்கிறோம்.

* இன்பமே மனிதனுடைய நோக்கமாக இருக்கிறது என்பது சரியல்ல. எத்தனையோ பேர் துன்பத்தைத் தேட வும் உலகில் பிறப்பெடுக்கிறார்கள்.

* பிறருக்கு செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனை எதிர்பார்க்கும்வரை மனிதனிடம் உண்மையான அன்பு உண்டாகாது.

* உழைப்பே வடிவாகத் திகழும், சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடி வருகிறாள்.

* உலகிற்கு நன்மை செய்வதே உங்களின் நோக்கமாகட்டும். பதவி, பட்டம், புகழ் என்று தேடி அலையாதீர்கள்.

* உறங்கிக் கொண்டிருக்க இது நேரம் அல்ல. அனைவரும் ஒன்றுபடுங்கள். பாடுபட்டு உழைத்து முன்னேறுங்கள்.

* பணியில் ஈடுபடும் போது எப்போதும் இதை நினைவில் கொள்ளுங்கள். அமைதி, மவுனம், ஒழுக்கம் இவற்றில் கருத்து செலுத்தியபடி பணியாற்றுங்கள்.

* அடக்கப்படாத மனம் நம்மை கீழ்நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால், அடக்கப்பட்ட மனமோ நமக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கும்.

* அற்பமான எந்த விஷயத்தையும் நாடுவது கூடாது. அதை மனதால் எண்ணுவதோ, கைகளால் தீண்டுவதோ கூடாது.

* இயற்கையை எதிர்த்துப் போராடுங்கள். அந்த ஓயாத போரே மனித முன்னேற்றத்தின் படிக்கட்டுகள்.

* வாழ்வில் பெரும் தியாகம் செய்தவர்களால் மட்டுமே பெரிய செயல்களைச் சாதிக்கும் வல்லமை கிடைக்கும்.

விரும்புகிறார் விவேகானந்தர்






      Dinamalar
      Follow us