
திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் - வெட்பாலை
முதலாம் ராஜேந்திரச்சோழன் போரில் ஈடுபட்டு நாடு திரும்பும் வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுத்தான். அங்கிருந்த மரத்தில் பட்டத்து யானையைக் கட்டிய போது அது மயங்கி விழுந்தது. ஆபத்து என கருதி மரத்தை கோடாரியால் வெட்ட ரத்தம் பீறிட்டது. அங்கு சுயம்பு சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த இடத்தில் திருப்பாலீஸ்வரர் என்னும் பெயரில் சிவனுக்கு கோயில் கட்டினான். யானை கட்டப்பட்ட மரம் 'வெட்பாலை' என பெயர் பெற்றது. இதுவே இங்கு தலவிருட்சமானது. சொரியாசிஸ் நோயை போக்க இதன் இலைகள் சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாகும்.
ஏழு விமானம் கொண்ட இக்கோயிலில் மரத்தால் ஆன லிங்கமும், கல்லால் ஆன ஆவுடையாரும் கொண்டவராக மூலவர் இருக்கிறார்.
பாற்கடலைக் கடைந்த தேவர்கள் அமிர்தம் சாப்பிட்ட பின் இங்குள்ள குளத்தில் கைகளை கழுவினர். கைகளில் ஒட்டிய அமிர்தம்
கலந்த நீரை குடிக்க தவளைகள் வடிவில் அசுரர்கள் அங்கு வந்தனர். அதையறிந்த தேவர்கள் குளத்தில் தவளைகள் வாழக் கூடாது என சாபமிட்டனர். இன்று வரை தவளைகள் இங்கு இல்லை.
அகஸ்தியர், மார்க்கண்டேயர் வழிபட்ட இங்கு மூலவர் பாலீஸ்வரர் என்றும் அம்மன் லோகாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். கல்வெட்டுகளில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னட மொழியில் கோயில் வரலாறு உள்ளது. பிரகாரத்தில் தலவிருட்சமான பாலைமரம் உள்ளது.
ரைட்டியா டிங்டோரியா (Wrightia tinctoria) என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இது அப்போசைனேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. பாலைமரம், கிரிமல்லிகை, குடசம்,
வற்சம், விரீட மரம், வேப்பாலிகமரம்,
கலிங்க மரம் என்றும் பெயர்கள் உண்டு. இதிலிருந்து கிடைக்கும் அரிசியை 'வெட்பாலை அரிசி' என்பர்.
திருப்பாலைவனம் பற்றி திருவாசகம்
'தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன்'
என திருவாசகம் எட்டாம் திருமுறை, இரண்டாம் பதிகம், 98ம் பாடலில் திருப்பாலைவனம் பற்றி உள்ளது.
பாலை நின்ற பாலை நெடுவழி
வறட்சி மிக்க பாலை நிலத்துக்கு உரியமரம் இது என சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. பாலை மரம் சங்க காலத்தில் இருந்து வருகிறது. வெட்பாலை மரத்தின் காய்கள் குறடு கம்பி போல் நீண்டிருக்கும்.
உள்ளுதொறு ஙகுவேன் றோழி வள்ளுகிர்ப்
பிடிபிளந் திட்ட நாரில்வெண் கோட்டுக்
கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைச்
செல்வ(ளி) தூக்கலி னிலைதீர் நெற்றங்
கல்லிழி யருவியி னொல்லென வொனிக்கும்
பட்டையை உரித்தால் பால் வெளிப்படும். அடிமரம் வெண்மையாகவும், காய் குறடு போல் இருப்பதாக நற்றிணை பாடல் கூறுகிறது. வெட்பாலை மரமே பாலை மரம் என உறுதி செய்யலாம். பாலை, தந்தப்பாலை, வெப்பாலை, நிலப்பாலை என்னும் பெயர்கள் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
சித்தர் போகர் பாடிய பாடல்
கறையான், வருண அரிசியோ அரிசியென்றும்
அருளினோம், விளாவரி யென்றும் பேரு
அரையான உலாவரிசி யென்றும் பேரு
அருளினோம், பாலரிசி யென்றும் பேரு
மறையான மதியரிசி இரவியரிசி யென்றும்
வசனித்தோம், இரு அரிசி யென்றும் பேரு
வரையான, வாமரிசி யென்றும் பேரு
வசனித்தோம், கருக்கிடையாய், வெட்பாலை
யரிசியின் பேரே
எட்டு அரிசிகளில் வெட்பாலையரிசியும் ஒன்றாகும். வருணரசி, உலாவரிசி, இருஅரிசி, வாமரிசி என்றும் இதற்கு பெயருண்டு.
சித்தர் அகத்தியர் பாடிய பாடல்
அக்கினியை வைத்திருக்கு மார்ந்தவா
தம்போக்குந்
திக்குடிரி தோடத்தைத் தீர்த்துவிடும் - சொக்கவிரு
கட்பாலைக் கூற்றை வைத்த கான மடமயிலே!
வெட்பாலை நன்மருந்தாம் விள்.
வெட்பாலை மரத்தின் இலை,
பட்டை உஷ்ணமானவை. இதன் இலையை மென்று சாப்பிட்டால் பல் வலி நீங்கும். பட்டையை கொதிக்க வைத்து
கஷாயம் செய்து சாப்பிட பேதி,
வயிற்று வலி மறையும்.
வெட்பாலை தன்னரிசி வீறுபித்த வாதமொடு
கொட்பார் கரப்பான் குடல்வாத - உப்பிசத்தைக்
காணாம லேநாளுங் கண்டிக்கும் காசினியிற்
பூணார் முலையா புகல்.
வெட்பாலை அரிசியை சமைத்து சாப்பிட குடலில் தங்கிய வாயு, குடலை முறுக்கி ஏற்படும் வலி தீரும்.
வெப்பாலை கைப்பாகும் வாத பித்த
கபந்தீர்க்குஞ் சூலை வியாதியை யடிக்கு
முட்பா யதரமூவ ரோகம் போக்கு
முற்றெழுந்த சேற்றும மதிசாரந் தீர்க்கும்
வெட்பாலை யரிவியுஷ்ட்டிணந் துவர்க்கைப்
பாகு
மிகுபாண்டு கபரோகங் கிருமி தோஷங்
கட்பாலை மடமயிலே யதிசா ரங்களக்
கினிமந்தந் தீர்க்குங் கடிதிற் காணே!
கசப்பு சுவை கொண்ட வெட்பாலையால் அக்கினி மந்தம், கபம், குடல்வாதம் விலகும்.
வெட்பாலை இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேங்காய் எண்ணெய்யில்
40 நாள் ஊற வைத்து தினமும் வெயிலில் வைத்து எடுக்க கருஞ்சிவப்பாக எண்ணெய் மாறும். இதனை தலையில் தேய்க்க பொடுகு, தோலில் செதில் உதிர்தல் நீங்கும். தோலில் அரிப்பு, பித்த வெடிப்பு, வறட்சி உள்ள இடங்களில் இதைப் பூசலாம்.
எப்படி செல்வது
* சென்னையில் இருந்து 60 கி.மீ.,
* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து 10கி.மீ.,
* பழவேற்காட்டில் இருந்து மீஞ்சூர் வழியில் 15 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 96919 80505
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567