/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பூப்பூக்கும் மாசம் தை மாசம்! ஊரெங்கும் கேட்கும் கெட்டிமேளம்!!
/
பூப்பூக்கும் மாசம் தை மாசம்! ஊரெங்கும் கேட்கும் கெட்டிமேளம்!!
பூப்பூக்கும் மாசம் தை மாசம்! ஊரெங்கும் கேட்கும் கெட்டிமேளம்!!
பூப்பூக்கும் மாசம் தை மாசம்! ஊரெங்கும் கேட்கும் கெட்டிமேளம்!!
ADDED : ஜன 17, 2018 03:52 PM

கெட்டிமேளம் ஒலிக்க, கல்யாணம் விமரிசையாக நடக்கும் மாதம் தை. கனவு நனவாக இங்கே இடம் பெற்றுள்ள கோயிலுக்கு செல்லலாமே!
கல்யாண யோகம் தரும் ஆதிகாமாட்சி
தேவர்கள் அசுரர்கள் தொல்லை நீங்க, அம்பிகையை நோக்கி தவமிருந்தனர். அவள் காளி வடிவெடுத்து அசுரர்களை அழித்தாள். பின் தேவர்களின் விருப்பத்தை ஏற்று, அங்கேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளை சாந்தப்படுத்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவளே 'ஆதி காமாட்சி' என்று பெயர் பெற்றாள். ஆதிகாமாட்சி சன்னதியின் முன் மண்டபத்தில், சக்திலிங்கம் உள்ளது. கல்யாண யோகம் உண்டாக, வெள்ளிக்கிழமை ராகு காலமான காலை 10:30 - 12:00 மணிக்குள் தீபமேற்றி வழிபடுகின்றனர்.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறிது துாரத்தில் கோயில்.
தொடர்புக்கு: 044 - 2722 2609
நல்ல வாழ்க்கை துணை வேண்டுமா
காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் நாக சுப்பிர மணியராக முருகன் வீற்றிருக்கிறார். இவருக்கு ஞாயிறு, வெள்ளியன்று ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்தால் நாக தோஷம் நீங்கி, நல்ல வாழ்க்கை துணை அமையும். நாக சுப்பிரமணியருக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி, தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடித்த நிலையில் காட்சி தருகின்றனர். 'குமர கோட்ட கல்யாண சுந்தரர்' என இவர் அழைக்கப்படுகிறார். காஞ்சி காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் கோயில்களுக்கு நடுவில் குமரக்கோட்டம் உள்ளது. காஞ்சிகாமாட்சி, ஏகாம்பரேஸ்வரரை தரிசித்து விட்டு குமரக்கோட்டத்தை தரிசித்தால் முழுபலன் கிடைக்கும்.
காஞ்சிபுரம் ராஜ வீதியில் கோயில் உள்ளது.
தொடர்புக்கு: 044 - 2722 2049
சிறுவாபுரி வந்தா... சீக்கிரமே திருமணம்
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் முருகன் வள்ளி மணாளனாக மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பாலசுப்பிரமணியர் என்னும் திருநாமத்துடன் காட்சி தருகிறார். முருகன் தவிர்த்த மற்ற தெய்வங்களின் திருமேனிகள், முருகனின் வாகனமான மயில் மரகதக்கல்லால் ஆனவை. முருகனுக்கு வலப்பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி உள்ளது. சிறுவாபுரி முருகனை மனதில் நினைத்தாலும் திருமணம் விரைவில் கைகூடும்.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து 30 கி.மீ., கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து மேற்கே 3 கி.மீ.,
தொடர்புக்கு: 94442 80595, 94441 71529
வாழ்வு தருவான் வள்ளி மணாளன்
திருத்தணி மலைப்பகுதியை ஆட்சி செய்த வேடர் தலைவன் நம்பிராஜனின் மகள் வள்ளி. அவளை மணம் புரிய வந்த முருகன், முதியவர் வடிவில் தோன்றினார். அதை அறியாத வள்ளி பயந்தோட, யானை மூலம் தடுத்தார். வள்ளி முதியவரை தழுவிக் கொண்டாள். இறைவனின் ஸ்பரிசம் பட்டதும் வள்ளிக்கு ஞானம் உண்டானது. அதன் பின் நம்பிராஜன் தலைமையில் வள்ளிக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்தது. இதன் அடிப்படையில் இது திருமணத்தலமாக உள்ளது.
திருச்செந்துாரில் சூரனுடன் போரிட்ட முருகன், இங்கு மனம் தணிந்த நிலையில் அருள்வதால் 'திருத்தணிகை மலை' என பெயர் வந்ததாகச் சொல்வர். ஐஸ்வர்யம் பெருகவும், செவ்வாய் தோஷம் நீங்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும் இங்கு வழிபடுகின்றனர்.
சென்னையிலிருந்து 97 கி.மீ.,
தொடர்புக்கு: 044 - 2788 5243
சிவபார்வதி நிச்சயதார்த்த தலம்
அக்னி வழிபட்ட சிவன் 'அக்னீஸ்வரர்' என்னும் பெயருடன் குத்தாலம் எனும் தலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு வாழ்ந்த பரத மகரிஷி, பார்வதி தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டுமென யாகம் நடத்தினார். சிவனருளால் யாகத்தீயில் அம்பிகையை குழந்தையாக தோன்றினாள். பரிமள சுகந்தநாயகி என பெயரிட்டு மகரிஷி வளர்த்தார். அம்பிகையை மணம் புரிய விரும்பிய சிவன், மகரிஷியிடம் முறைப்படி பெண் கேட்டார். அவரும் சம்மதிக்க, நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தது. இதனால் இக்கோயிலை 'நிச்சயதார்த்த கோயில்' என சொல்வர். நிச்சயதார்த்தம் நடந்த பிறகு பிரச்னையின்றி திருமணம் நடந்தேற பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கி.மீ.,
தொடர்புக்கு: 94435 64607, 94878 83734
தடை போக்கும் தேரெழுந்துார்
ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் விளையாடினர். நடுவராக இருந்த பார்வதி, தன் சகோதரர் பெருமாளுக்கு சாதகமாக செயல்பட்டாள். கோபம் கொண்ட சிவன், பார்வதியை பூலோகத்தில் பசுவாக பிறக்கும்படி சபித்தார். பார்வதிக்கு துணையாக சரஸ்வதியும், லட்சுமியும் பசு வடிவில் உடன் வந்தனர். பசுக்களை மேய்ப்பவராக வந்த பெருமாள், 'ஆமருவியப்பன்' என்ற திருநாமத்துடன் தேரெழுந்துார் என்னும் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில், 13 அடி உயரம்கொண்ட சாளக்கிராம கல்லால் ஆன பெருமாளுக்கு அருகில் பார்வதி பசு வடிவில் இருக்கிறாள். மார்க்கண்டேயர், பக்த பிரகலாதன் ஆகியோரும் உடனிருக்கின்றனர். திருமணத்தடை நீங்க இவரை வழிபடுவது சிறப்பு.
மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் 10 கி.மீ.,
தொடர்புக்கு: 04364 - 237 952
கல்யாண கனவு நனவாக...
வேதங்களை, அசுரன் ஒருவன் திருடினான். பெருமாள் வேதங்களை மீட்டார். அசுரனிடம் இருந்த தோஷம் தீர, வேதங்கள் சிவனை வழிபட்டன. வேதங்களின் வேண்டுகோளை ஏற்ற சிவன், வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். வேதங்கள் வழிபட்ட இத்தலம் 'திருவேதிகுடி' எனப்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபம் நீங்க இத்தலத்தில் வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு 'வேதி' என்றும் பெயருண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் உண்டானது. கல்யாண கனவு நனவாக இங்கு வழிபடுகின்றனர். இங்கு அம்பிகை மங்கள வாழ்வு அருள்வதால் 'மங்கையற்கரசி' எனப்படுகிறாள். மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகின்றனர்.
தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் 11 கி.மீ., துாரத்தில் கண்டியூர். அங்கிருந்து 3 கி.மீ.,
தொடர்புக்கு: 93451 04187, 98429 78302
திருமணம் கைகூட திங்களன்று வாங்க!
பக்தியே முக்திக்கு வித்தாகும் என்பதை உலகிற்கு உணர்த்த பார்வதி, காவிரியாற்றின் தென்கரையில் தங்கி சிவபூஜையில் ஈடுபட்டாள். சிவ தரிசனம் கிடைக்க காலம் தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும், மனம் தளராமல் ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தாள்.
பார்வதியை சோதிக்க எண்ணிய சிவன், ஜோதி பிழம்பாக காட்சியளித்தார். தீப்பிழம்பாக வந்தாலும், அதில் சிவன் இருப்பதை அறிந்த அவள், தீயை கைகளால் கட்டித் தழுவினாள். சிவன் மனம் குளிர்ந்து அம்பிகையை ஏற்று, சத்திமுற்றம் என்னும் இத்தலத்தில 'சிவக்கொழுந்தீசர்' என்னும் பெயருடன் வீற்றிருக்கிறார். மணமாகாதவர்கள் திங்களன்று தரிசித்தால் திருமணம் கைகூடும். அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் இங்கு தரிசிப்பது சிறப்பு.
கும்பகோணம் பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ.,
தொடர்புக்கு: 04374 - 267 237, 94436 78575, 94435 64221
மீனாட்சி கல்யாண வைபோகமே...!
அரசன் மலையத்துவஜன், காஞ்சனமாலை தம்பதிக்கு குழந்தை இல்லாததால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். அப்போது, பார்வதி மூன்று தனங்கள் உடைய பெண் குழந்தையாக தோன்றினாள். குழந்தையின் தோற்றம் கண்டு அரசன் வருந்த, 'மணாளனைக் கண்டதும் தனம் மறையும்' என அசரீரி ஒலித்தது. பெற்றோர் குழந்தைக்கு 'தடாதகை' என பெயரிட்டு வளர்த்தனர். பாண்டிய இளவரசியான இவள் மீன் போல கண்கள் கொண்டவள் என்பதால் மீனாட்சி எனப்பட்டாள். படைகளுடன் புறப்பட்ட அவள், எல்லா உலகங்களையும் வென்றாள். கைலாயம் சென்று, சிவனுடன் போரிட்ட போது தனம் மறைய, சிவனே மணாளன் என்பது புரிந்தது. மதுரையில் மீனாட்சி, சிவனுடன் மணக்கோலத்தில் காட்சிஅளித்தாள். இங்கு வழிபட திருமண யோகம் வரும்.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ.,
தொடர்புக்கு: 0452 - 234 9868