/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நல்ல திருப்பம் உருவாக...திருநாராயணபுரம் வாங்க!
/
நல்ல திருப்பம் உருவாக...திருநாராயணபுரம் வாங்க!
ADDED : ஜன 17, 2018 03:55 PM

ராமானுஜர் திருப்பணி செய்த தலம் மைசூரு அருகிலுள்ள திருநாராயண புரம். இங்குள்ள மலை அடிவாரத்தில் திருநாராயணரும், மலை மீது யோகநரசிம்மரும் உள்ளனர். இங்கு வருபவர்களின் விருப்பம் நிறைவேறுவதுடன், வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.
தல வரலாறு
விஷ்ணுவிடம் இருந்து ஒரு விஷ்ணு சிலையைப் பெற்றார் பிரம்மா. அதை தன் மகன் சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர், அதை திருநாராயணபுரத்தில், பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே இங்கு நாராயண பெருமாளாக அருள்பாலிக்கிறார். மூலவர் மேற்கு நோக்கி நிற்கிறார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.
பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரத நந்தினி என்னும் பக்தை, மூலவரின் திருவடியில் இருக்கிறாள். மூலவரின் மனைவியான யதுகிரித் தாயார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.
பேசும் ராமானுஜர்
ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதுார், திருக்கோஷ்டியூர் போல, இங்கும் ராமானுஜருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உபதேச முத்திரையுடன் காட்சி தரும் இவர் நாடி வரும் பக்தர்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் பாவனையில் இருப்பதால் 'பேசும் யதிராஜர்(ராமானுஜர்) எனப்படுகிறார். இங்குள்ள இசைத்துாண் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.
யோக நரசிம்மர்
இங்குள்ள மலையில் யோக நரசிம்மர் உள்ளார். பிரகலாதனுக்காக விஷ்ணு, நரசிம்மராக அவதரித்து அவனது தந்தை இரண்யனை கொன்றார். தந்தை இறக்க காரணமாக இருந்த பிரகலாதனுக்கு 'பிதுர் ஹத்ய தோஷம்' ஏற்பட்டது. இதை போக்க இத்தலத்தில் பிரகலாதன் தவம் புரிய நரசிம்மர் தோஷம் போக்கினார். அவரே இங்கு வீற்றிருக்கிறார்.
படியேறினால் பலன்
400 படிகள் ஏறினால் மலையிலுள்ள கோயிலை அடையலாம். நரசிம்மர் சன்னதியின் முன் நவக்கிரகங்கள் ஒன்பதும் படிக்கட்டுகளாக உள்ளன. யோக நரசிம்மரைத் தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும்.
எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 70 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ராமானுஜ ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்
நேரம்: அடிவாரக் கோயில் காலை 8:30 - 1:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
மலைக்கோயில்: காலை 9:30 - 2:00 மணி; மாலை 5:00 - 8:00மணி
தொலைபேசி: 08236 - 299 839
அருகிலுள்ள தலம்: 18 கி.மீ.,ல் தொண்டனுார் நம்பி நாராயணர் கோயில்