/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பார்க்க மட்டுமல்ல கொலு படிக்கவும் தான்!
/
பார்க்க மட்டுமல்ல கொலு படிக்கவும் தான்!
ADDED : செப் 15, 2017 01:38 PM

நவராத்திரியில் 'கொலு' வைத்து அம்பிகையை வழிபடுகிறோம். கொலு பொம்மைகள், வாழ்விற்கான படிப்பினையை தருகிறது. பராசக்தி பலவித கோலங்களில் அழகுடன் வீற்றிருப்பதால் 'கொலு' என்று பெயர் வந்தது. அம்பிகைக்கு 'சிவை' என்னும் பெயர் இருப்பதால் 'சிவை ஜோடிப்பு' என்றும் சொல்வர்.
கலசத்தில் அம்பிகை: கொலு வைப்பதற்கு முன் வீட்டை சுத்தமாக்கி, கோலங்களால் அழகுபடுத்த வேண்டும். வாசலில், மாவிலைத் தோரணம் கட்டலாம்.
மரப்பலகையால் சிறு மண்டபம் அமைத்து அதன் நடுவில் உயரமான பலகையை சிம்மாசனமாக வைக்க வேண்டும். அதன் மீது பட்டுப்புடவை விரித்து, மண் அல்லது உலோகத்தால் ஆன அம்மன் சிலையை வைக்க வேண்டும்.சிலை இல்லாவிட்டால் அம்மன் படத்தை வைக்கலாம். வலப்புறத்தில் கலசம் வைக்க வேண்டும். கலசத்தையும் அம்மனாக பாவித்து வணங்க வேண்டும். தினமும் மாலையில் அம்மனை அலங்கரிக்கும் போது கலசத்திற்கும்
மலரிட்டு வணங்க வேண்டும்.
அடுக்கும் விதம் : முதல்படி முதல் ஆறாம்படி வரை ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களை அடுக்குதல் வேண்டும். முதல்படியில் புல், செடி, கொடி முதலிய தாவர பொம்மைகளும், இரண்டாம் படியில் சங்கு, சிப்பியாலான பொம்மைகளும், மூன்றாம் படியில் ஈ, எறும்பு முதலிய உயிர்களும், நான்காம் படியில் வண்டு, நண்டு போன்றவையும், ஐந்தாம் படியில் பறவை, மிருகம் போன்றவையும், ஆறாம் படியில் வணிகர், குறவன், பாம்பாட்டி, போலீஸ் போன்ற மனிதர் சிலைகளை அடுக்க வேண்டும். ஏழாம் படியில் முனிவர், மகான் போன்ற உயர்நிலை மனிதர்களையும், எட்டாவது படியில் இந்திரன், குபேரன் போன்ற தேவர்கள், நவக்கிரகங்களையும் வைக்க வேண்டும். ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்ற தெய்வங்களையும் அடுக்க வேண்டும். பொம்மைகள் கிடைக்காவிட்டால், எல்லாப்படிகளிலும் தெய்வச்சிலைகளை அடுக்கலாம். தற்காலத்தில் படிகள் மட்டுமில்லாமல், தெப்பக்குளம், கோயில், தோட்டம், சந்தை, திருமண வைபவம், கடைத்தெரு போன்றவையும் இடம் பெறுகின்றன.
கொலு தத்துவம்: படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். பொதுவாக 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் வைப்பர். இந்த படிகளைப் போல மனிதனும் வாழ்வில் பல படிநிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. மேல்நோக்கிச் செல்லும் படி போல, மனிதனும் வாழ்வில் உயர வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஓரறிவு உயிராக இருந்த நாம், பரிணாம வளர்ச்சியால் தற்போது ஆறறிவு பெற்ற மனிதராகப் பிறந்திருக்கிறோம். இதனை பயன்படுத்தி நல்வழியில் வாழ்ந்தால் அம்பிகையின் அருளால் தெய்வ நிலையை அடையலாம் என்பதையே கொலு உணர்த்துகிறது.