ADDED : அக் 01, 2012 03:26 PM

திருவள்ளூர் மாவட்டம் அரன்வாயல் கிராமத்தில் திருத்தாளீஸ்வரர் கோயில் உள்ளது. பழமை மிக்க இந்தக் கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது.
தல வரலாறு:
தொண்டை மண்டலத்தில் இருந்த மோகூர் பட்டணத்தில் காளியை காவல் தெய்வமாகக் கொண்ட குறும்ப அரசன் இருந்தான். இவனுக்கும் சோழமன்னனுக்கும் போர் ஏற்பட்டது. குறும்ப அரசனுக்கு உதவியாக களத்தில் குதித்த காளிதேவியை, சோழமன்னனுக்கு ஆதரவாக இருந்த சிவபெருமான் கட்டுப்படுத்தி, அவளது கோபம் தணித்தார். அவளை அந்த ஊரின் காவல் தெய்வம் ஆக்கினார். அவளை 'செல்லியம்மன்' என மக்கள் அழைத்தனர். இருந்த போதும், குறும்ப அரசன் யாகம் ஒன்றை நடத்தி, பெரிய நாகம் ஒன்றை வரவழைத்தான். சோழமன்னனை நோக்கி அதை ஏவினான். அந்த நாகத்தை, சிவன் பிடித்து பூமியில் அடித்தார். பாம்பு பல பாகங்களாகச் சிதறியது. பாம்பின் தலைப்பாகம் விழுந்த இடம் தலைக்காஞ்சேரி என்றும், சட்டை(ஆடை)விழுந்த இடம் ஆற்றம்பாக்கம் என்றும் ஆனது. பாம்பின் பெரும்பகுதி விழுந்த இடம் பெரும்பாக்கம் என்றும், வால் விழுந்த இடம் அரவம்வால் என்றும் ஆனது. அதுவே மருவி அரன்வாயல் எனப்படுகிறது.
அரவம் என்றால் பாம்பு. பாம்பைக் கொன்ற சிவன், இங்குள்ள தாளிப்பனை மரத்தடியில் எழுந்தருளினார். பிற்காலத்தில் அம்பாள் மரகதாம்பிகை சந்நிதி அமைக்கப்பட்டது.
சிறப்பம்சம்:
கருவறையில் கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார் திருத்தாளீஸ்வரர். விநாயகர், முருகன், சூரிய பகவான், கயிலாசநாதர் சந்நிதிகளும் உள்ளன. கும்பாபிஷேகம் நடந்து பல வருடங்களாகி விட்டதால் சிதிலமடைந்துள்ளது. தற்போது திருப்பணி நடக்கிறது. ராஜகோபுரம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் நடக்க உள்ளன. திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
இருப்பிடம்:
சென்னையில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் திருவள்ளூர். இங்கிருந்து 6 கி.மீ., தூரத்தில் அரன்வாயல். இங்கிருந்து 2 கி.மீ., ஆட்டோவில் சென்றால் கோயில். திருவள்ளூர், தாம்பரத்தில் இருந்து பஸ் உண்டு.
போன்:
94445 32886.