/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பெண்களுக்கு அனுமதி இல்லாத கேரள முருகன் கோயில்!
/
பெண்களுக்கு அனுமதி இல்லாத கேரள முருகன் கோயில்!
ADDED : அக் 20, 2017 03:46 PM

கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள கிடங்கூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் 'பிரம்மச்சாரியாக அருள்கிறார். இங்குள்ள
சன்னதிக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. முருகன் பிரம்மச்சாரியாக இருந்த போது தான் சூரசம்ஹாரம் செய்தார். அந்த பிரம்மச்சாரி வடிவத்தைத் தரிசிக்க, கந்த சஷ்டியை ஒட்டி இங்கு சென்று வரலாம்.
தல வரலாறு: பிரம்மச்சாரியான கவுன மகரிஷி, வனமாக இருந்த இப்பகுதியில் தவம் செய்து வந்தார். ராவண வதத்திற்காக சென்ற ராமபிரான், திரும்பி வரும்போது கவுன மகரிஷியை சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால், அவர் வரவில்லை. சீதையுடன் ஊர் திரும்பும் மகிழ்ச்சியில், தன்னை ராமன் மறந்து விட்டதாக கருதிய அவர், இல்லறத்தில் அவர் இருப்பதால் தான் இத்தகைய இக்கட்டான நிலைமை ஏற்பட்டதாக கருதினார்.
இந்த மகரிஷிக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருந்தார். ராமனிடம் கோரிக்கை வைத்து நிறைவேறாததால், முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி கோரிக்கை வைக்க நினைத்தார்.
அவருக்கு இரண்டு மனைவிகள் என்பதால் தன் கோரிக்கைகளை கவனிப்பாரோ மாட்டாரோ என்று சந்தேகப்பட்டார். அந்த சந்தேகத்துடனேயே முருகனுக்கு ஒரு சிலை வடித்தார். 'பிரம்மச்சாரி முருகன்' என பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்து விட்டார். அதுவே இந்த தலத்தில் இருக்கிறது.
தல சிறப்பு: பரசுராமர் உருவாக்கிய ஊர் கிடங்கூர். இக்கோயிலில் பெருமாள் சன்னதி இருக்கிறது. முருகன் சன்னதி எதிரே கொடி மரம், பலிபீடம் உள்ளது. கேரள கோயில்களிலேயே இது தான் மிக உயரமான கொடி மரம். கொடி மரத்தின் மேல், ஒரு மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கூத்தம்பலம், மருத்துவ குணம் கொண்ட குறுந்தொட்டி என்ற மரத்தினால் உருவாக்கப்பட்டது. இந்த அம்பலத்தில், ராமாயண, மகாபாரத காட்சிகளும், பரத முனிவரது நாட்டிய சாஸ்திர வடிவங்களும் உள்ளன. திருவிழா காலங்களில் இங்கு பழங்கால கலையான கூடியாட்டம் என்ற கூத்து நடக்கிறது. இந்த கூத்தில்
முருகனைக் குறித்த 'பிரம்மச்சாரி கூத்து' இப்பகுதி மக்களின் ரசனையை பெற்றது. கூத்தம்பலத்தின் உள்ளே புவனேஸ்வரி அம்மன் அருள் செய்கிறாள்.
இவளுக்கு, செவ்வாய், வெள்ளியில் குருதி பூஜை நடக்கிறது.
வழக்குகளில் ஜெயிக்கவும், தொழில் போட்டியை சமாளிக்கவும், எதிரிகளின் ஆதிக்கத்தை தடுக்கவும் இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பெண்களுக்கு அனுமதியில்லை: இல்லறத்தில் இருப்பவர்களால் எதிலும் கவனம் செலுத்த இயலாது என்ற கருத்தின் அடிப்படையில் கவுன மகரிஷி 'பிரம்மச்சாரி முருகன்' சிலையை பிரதிஷ்டை செய்ததால், முருகன் சன்னதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொடிமரம் அருகே நின்று தரிசிக்கலாம். ஒரு சில தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களும் தம்பதி சமேதராக முருகன் சன்னதிக்குள் செல்ல
முடியாது. கணவன் மட்டுமே உள்ளே செல்ல, மனைவி கொடிமரம் அருகில் நின்று குழந்தை வரம் கேட்கலாம். குழந்தை பிறந்த பிறகு, இத்தலத்தின் முக்கிய பிரார்த்தனையான 'பிரம்மச்சாரி கூத்து' நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது. உடல்நலம் வேண்டி பஞ்சாமிர்த அபிஷேகமும், திருமணத்தடை நீங்க சுயம்வர அர்ச்சனையும் செய்யப்படுகிறது. முருகனுக்கு துலாபாரம், காவடி, சுட்டுவிளக்கு ஏற்றியும், பெருமாளுக்கு பால்பாயாசம், அப்பம் படைத்தும் வணங்குகின்றனர்.
கோயில் சுற்றுப்பகுதியில் பகவதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் 'பகித்தாசரி' என்ற வாஸ்துபடி கட்டப்பட்டது.
எப்படி செல்வது: கோட்டயம்- பாலா கிராம சாலையில்20 கி.மீ., கடந்தால் கிடங்கூர். இங்கிருந்து பிரியும் சாலையில் ஒரு கி.மீ.,
விசேஷ நாட்கள்: மாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றி, உத்திரத்தில் ஆறாட்டு நடக்கும் வகையில் பிரம்மோற்ஸவம், தைப்பூசம்,
திருக்கார்த்திகை.
நேரம்: அதிகாலை 4:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0482 - 254 478, 257 978